பெரம்பலூர் அருகே உள்ள பொம்மனப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கோபால் மகன் குமார் (23). திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 16 வயது மாணவி பொம்மனப்பாடி
கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கிய பாடாலூரில் நர்சிங் கோர்ஸ் படித்துவந்தார். இதனிடையே குமாருக்கும், 16 வயது மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 வயது மாணவியை கடத்தி சென்று குமார் திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கடந்த 16.11.2018ம்தேதி பாடாலூர் போலீசில் புகார் கொடுத்தார்.
வழக்கை விசாரித்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் குமார், அவரது பெற்றோர் கோபால், சரோஜா, உறவினர்கள் தனம், திவ்யா ஆகியோர் மீது வழக்குபதிந்து குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் குமார் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்துவந்தது. அரசு தரப்பில் வக்கீல் வினோத்குமார் ஆஜரானார்.
நேற்று இந்த வழக்கை விசாரித்து 16 வயது மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் குமாருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், குழந்தை திருமணம் செய்ததற்காக 2 ஆண்டு சிறை தண்டனையும், இதனை ஏகபோக காலத்தில் அனுபவிக்கவேண்டும் எனவும், அபராதமாக ரூ. 5 ஆயிரம்
செலுத்தவேண்டுமெனவும், இந்த வழக்கில் தொடர்புடைய கோபால், சரோஜா, உறவினர்கள் தனம், திவ்யா ஆகிய 4 பேரை விடுதலை செய்தும் நீதிபதி மலர்விழி உத்தரவிட்டார். இதையடுத்து குற்றவாளி குமார் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.