A teenager who smuggled and sold Gutka in a car across Tamil Nadu was arrested in Perambalur!
![](https://www.kalaimalar.com/wp-content/uploads/2023/11/Gutka_Perambalur_Police.jpg)
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் ,கடந்த நவ.17ம் தேதி அதிகாலை சுமார் 5 மணி அளவில் சென்னையிலிருந்து திருச்சி சென்ற அரசு பேருந்தின் பின்புறம் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது, அதில் வந்த மர்ம நபர்கள் இருவர் காரை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி தலைமறைவாகினர்.
சம்பவ இடத்திற்கு ஹைவே பேட்ரோல் போலீசார் காரை சோதித்த போது காரில் சுமார் 500 கிலோ குட்கா பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. அந்த காரை கைப்பற்றிய வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அதில் முதல் கட்டமாக, பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் – தண்ணீர் பந்தல் அருகே காருடன் நின்று கொண்டிருந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். பின்னர், நடத்திய விசாரணையில், ராஜஸ்தான் மாநிலம், ஜலோர் அருகே உள்ள மெங்கல்வா பகுதியை சேர்ந்த பாபுலால் மகன் கைலாஷ்குமார் என்பதும், பெங்களூரில் தங்கி குட்கா வாங்கி தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு வியாபாரம் செய்து வந்ததும், விபத்திற்குள்ளான கார் கைலாஷ்குமாருக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்ததை அடுத்து வாலிபரை கைது நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர். மேலும், அவரிடம் இருந்து அரை கிலோ கஞ்சாவும், கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர், அவர்கள் இருவர் கிடைத்தால் மட்டுமே தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களுக்கு, தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் தொடர்புடைய முக்கிய புள்ளிகள் யார் யார் என தெரிய வரும்!
கடந்த ஆட்சியில் குட்கா விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.