Agricultural Technology through radio school: Call for farmers to book
வானொலி பள்ளி மூலம் வேளாண் தொழில்நுட்பத்தை அறிந்துகொள்ள விவசாயிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தலைவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் டாக்டர் அகிலா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம், திருச்சி அனைத்திந்திய வானொலி நிலையத்தின் மூலம் பருவநிலை மாற்றங்களுக்கேற்ற வேளாண்மை தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் வானொலி பள்ளியை வரும் நவம்பர் முதல் ஜனவரி வரை நடத்தவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாறிவரும் பருவநிலைகளுக்கேற்ப வேளாண் தொழிலில் கடைப் பிடிக்க வேண்டிய முக்கிய அணுகுமுறைகளான மண்வள மேம்பாடு, மண் மூடாக்கு, பருவமாற்ற காலங்களில் கைகொடுக்கும் பூ மற்றும் காய்கறி பயிர்களின் சாகுபடிக் குறிப்புகள், வறட்சியை தாங்கி வளரக்கூடிய குறுகிய காலப் பயிர்கள், மழைநீர் சேமிப்பு முறைகள், பருவநிலை மாற்றத்துக்கேற்ற ஒருங்கிணைந்த பண்ணையம், மானாவாரி காலங்களில் கால்நடைகளின் பராமரிப்பு முறைகள், தீவன மேலாண்மை குறித்த விழிப்புணர்வு, விளக்க உரைகளும் 13 வாரங்களில் வானொலி வாயிலாக விரிவாக எடுத்துரைக்கப்படும்.
இதில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள விவசாயிகள் நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ரூ. 100 மட்டுமே செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
13வது வாரம் விவசாயிகளுக்கு நேரடி கலந்துரையாடல் மூலம் சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.