Allow the soil to be taken out of the water Sources in the district: Collector Announcement

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள அறிவிப்பு:
கட்டணமில்லாமல் பொதுமக்கள் வீட்டு பயனுக்காக மற்றும் வேளாண் நோக்கத்திற்காக மண் எடுக்க மனு செய்யும் மனுதாரின் வசிப்பிடம் அல்லது வேளாண் நிலமும், மண் வெட்டி எடுக்கப்பட வேண்டிய இடமும் அதே வருவாய் கிராமத்தில் அல்லது அருகில் உள்ள வருவாய் கிராமத்தில் இருக்க வேண்டும்.
இலவசமாக வழங்கப்படும் மண்ணின் அளவு விவசாயப் பணிகளில் நஞ்சைப்பணிக்காக இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 75 கன மீட்டர் அல்லது 25 டிராக்டர் லோடுகளும், புஞ்சை நிலப் பணிக்காக இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 90 கன மீட்டர் அல்லது 30 டிராக்டர் லோடுகளும், சொந்த வீட்டு உபயோகத்திற்காக 30 கன மீட்டர் அல்லது 10 டிராக்டர் லோடுகளும், மண்பாண்டம் தயாரித்தலுக்காக 60 கன மீட்டர் அல்லது 20 டிராக்டர் லோடுகளும் வழங்கப்படும்.
அடங்கலின்படி விண்ணப்பதாரருக்கு சொந்தமான நிலம் அல்லது விவசாயம் செய்யும் குத்தகைதாரர் என்பதற்கு சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் பெறப்பட்ட சான்று இணைக்கப்பட வேண்டும்.
கனிமத்தை இலவசமாக பெற்றுக்கொள்ள சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்களிடம் முன் அனுமதி பெறவேண்டும். அனுமதியானது 20 நாட்களுக்கு மிகாமல் வழங்கப்படும். பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையால் மண் வெட்டி எடுக்க வரையறுக்கப்பட்ட பகுதியில் இருந்து மட்டுமே மண் வழங்க அனுமதி வழங்கப்படும்.
அனுமதிதாரர் தனக்கு அனுமதி வழங்கப்பட்ட ஏரி, குளத்திலிருந்து அவரது சொந்த செலவில் டிராக்டர் வாகனத்தை கொண்டு சென்று கனிமத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். வாகனத்தில் ஏரி தொடர்புடைய துறையால் கனிமம் வெட்டி ஏற்றி அனுப்பப்படும்.
இந்த நிலங்களிலிருந்து கனிமங்கள் வெட்டியெடுக்க குளக்கரையானது அங்கீகரிக்கபட்ட சாலையாக அல்லது வண்டிப் பாதையாக இருந்தாலன்றி கரை நெடுக வண்டல் மண், சவுடு மண்இ கிராவல் மண் போன்றவற்றை ஏற்றக்கூடாது.
மண் வெட்டி எடுத்து வெளியேற்ற ஏரி, குளம் ஆகியவற்றின் கரைகளை வெட்டி பாதை அமைக்கக்கூடாது. வெட்டியெடுக்கப்பட்ட வண்டல் மண், சவுடு மண், கிராவல் மண் போன்றவற்றைக் குளத்தின் படுகைகள், மதகு அல்லது குளங்களின் ஏனைய யாதொரு கட்டுமானங்கள் மற்றும் தரைபாலங்கள் அல்லது கரைகளின் சரிவுகளில் குவித்து வைக்கக்கூடாது. வண்டிகளும், கட்டை வண்டிகளும் குளங்களின் அணை சுவர் மதகு அல்லது குளங்களின் ஏனைய கட்டுமானங்களின் யாதொரு பகுதியை நெருங்கி, அவற்றைச் சேதப்படுத்தக்கூடாது.
அனுமதி பெற்றவர், அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக வெட்டியெடுத்தது கண்டறியப்படுமாயின் அல்லது அனுமதி வழங்குவதில் ஏதேனும் விதி மீறல்கள் செய்யப்பட்டிருப்பது கவனத்திற்குக் கொண்டு வரப்படுமாயின், அனுமதி ரத்து செய்யப்படும்.
மேலும், குளம் அணுகுச்சாலை முதலியவற்றுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டிருப்பின் வெட்டியெடுக்கப்பட்ட அதிக அளவு மற்றும் குளங்களுக்கு ஏற்பட்ட சேதங்களின் அளவைப் பொறுத்து அவரிடமிருந்து தொகை வசூலிக்கப்படும்.
குளத்தைச் சீரமைப்பதற்கு ஏதேனும் தொகை செலவிடப்பட்டிருப்பின் அத்தொகையும் அனுமதி பெற்றவரிடமிருந்து வசூலிக்கப்படும். எனவே, விவாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அரசு வதிகளுக்குட்பட்டு இலவசமாக மண் எடுத்துக்கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.










kaalaimalar2@gmail.com |
9003770497