At least 25 people were injured in the street Dog bite near Namakkal.
நாமக்கல் அருகே வளையப்பட்டியில் தெருநாய் கடித்ததில் 25 பேர் காயமடைந்தனர்.அனைவரும் வளையப்பட்டி் ஆரம்ப சுகாதா நிலையம் மற்றும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
நாமக்கல் நகராட்சி மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமப்புறங்களில் தெரு நாய்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் உயர்ந்துள்ளது. இதனால், சாலைகளில் மக்கள் நடந்து அல்லது வாகனங்களில் செல்லும்போது தெருநாய்கள் விரட்டி அச்சுறுத்தி வருகிறது. சில நேரங்களில் மக்களை கடித்து காயமும் ஏற்படுத்துகிறது.
குறிப்பாக தெருநாய் அதிகரிப்பால் பள்ளி மாணவ, மாணவியர் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் அருகே வளையப்பட்டியில் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள தெருநாய் ஒன்று மக்களை விரட்டி விரட்டி கடித்ததில் 25 பேர் காயமடைந்தனர்.
இதன்படி வளையப்பட்டியைச் சேர்ந்த ஆர். தங்கராசு ( வயது 42), மணிகண்டன் (37), வடிவேல் (45),துர்கா (27), குழந்தைவேல் (70), பாலசுப்ரமணி (56), கார்த்தி (29) உள்பட 25 பேர் காயமடைந்தனர்.
அனைவரும் வளையப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுச் சென்றனர். இதில் 3 பேர் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக நாமக்கல் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை வளையப்பட்டி ஊராட்சியினர் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.