At the Perambalur Collector’s office, a young man poured petrol and tried to set fire!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், ரஞ்சன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி மகன் அருள்செல்வம் (வயது 27), கூலித் தொழிலாளியான இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு வாலிகண்டபுரம் கிராமத்தில் டூவீலரில் சென்றபோது அவ்வழியே வந்த அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானார்.
இந்த விபத்தில் இடுப்பு மற்றும் கால் முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய அருள் செல்வம் இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதோடு அரசின் மூலம் கிடைக்கப்பெற வேண்டிய உதவித்தொகை கேட்டு பலமுறை மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தும் பலன் இல்லாததால், மனமுடைந்து, இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்ட அரங்கிற்கு தனது தாய் சரோஜா(54), மற்றும் மனைவி கவிதா(24), மகனுடன் வந்த அருள்செல்வம் அதிகாரிகள் மனுக்களை வாங்கி கொண்டிருந்த அரங்கிற்குள் சென்றதும் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு நிலவியது.
இதனைக்கண்ட அதிர்ச்சியடைந்து மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறை அதிகாரிகளும் கூச்சலிட்டனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெரம்பலூர் போலீசார் உடனடியாக ஓடிச்சென்று அருள்செல்வத்தை தீக்குளிக்க விடாமல் தடுத்து நிறுத்தி, வெளியே அழைத்துச் சென்று தலையில் தண்ணீரை ஊற்றி அமர வைத்து தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உதவித்தொகை கோட்டு பலமுறை மனு அளித்தும் பலனில்லாததால் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குள் வாலிபர் ஒருவர் திடீரென தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பொது மக்கள் மற்றும் தனி நபர்கள் அளிக்கும் மனுவின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அதற்கான தீர்வை வழங்க வேண்டும் என்று அரசின் உத்தரவு இருந்தும் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல், குறைதீர் கூட்டத்தில் கூட பங்கேற்காமல் அலட்சியம் காட்டி வரும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தாவை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட அருட்செல்வம் உள்ளிட்ட பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.