Awareness of Safe Fireworks Explosion at Father Rover High School, Elambalur
பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் இந்திரா நகர் தந்தை ரோவர் உயர்நிலைப்பள்ளியில், தீயணைப்பு மீட்பு படையினர், தீபாவளி விழாவில் பட்டாசுக்களை வெடிப்பது குறித்து ரோவர் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு, தலைமை ஆசிரியர் செ. அமுதா தலைமையில் விழிப்புணர்வு பெறும் வகையிலும், பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடும் வழிமுறைகளை செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.
பெண்கள் பட்டாசு வெடிக்கும் போது துப்பட்டாவை, கட்டிக் கொண்டுதான் பட்டாசு கொளுத்த வேண்டும். காற்றில் பறக்க விட்டுக் கொண்டு செய்யக் கூடாது. குழந்தைகள், பெரியவர்கள் மேற்பார்வையில்தான், நீண்ட வத்திகளை கொண்டு, பட்டாசுளை வெடிக்க செய்ய வேண்டும்,
சங்கு சக்கரம் பட்டாசு வெடிக்கவில்லை என்றால் விட்டுவிட வேண்டும், அதை கையால் சுற்ற முயற்சிக்க கூடாது. புஸ்வானத்தை தள்ளி இருந்தே பற்ற வைக்க வேண்டும். உள்ளங்கையில் பற்ற வைப்பதோ, அல்லது பக்கவாட்டில் பற்ற வைப்பதோ கூடாது. மத்தாப்பை தள்ளி நின்று கைகளை நீட்டி கொளுத்தி மகிழ வேண்டும், ஆடைகளின் அருகில் எடுத்து வரக்கூடாது. ஆட்டோ பாம், ராக்கட் போன்ற வெடிகளை கூரை வீடுகள் அருகே பற்ற வைக்க முயற்சிக்க கூடாது. தவறி கூரை மேல் விழுந்தால், தீவிபத்தை உண்டாக்கி பொருள் சேதத்தை ஏற்படுத்தும்.
கண்ணாடி, செருப்பு, பருத்தி ஆடைகளை அணிந்து கொள்வதே சிறந்த வழியாகும். பட்டாசுகளை கொளுத்திய பின்னர் சிதறிக்கிடக்கும் பட்டாசு மருந்துகளை ஒன்று சேர்த்து பற்ற வைக்கக் கூடாது. அது விபரீத்தை உண்டாக்கும். எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் அருகில் பட்டாசுகளை வைக்கவோ, பற்ற வைக்கவோ கூடாது. வாளி நிறைய தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும், வாகன போக்குவரத்து உள்ள பகுதிகளில் பட்டாசு வெடிக்க செய்யக்கூடாது, அடுப்புகளின் அருகில் ஈரமான பட்டாசுகளை உலர வைக்க கூடாது, விலங்குகளை துன்புறுத்தும் வகையிலோ, அரசு விதித்த நேரத்தை மீறியோ பட்டாசு வெடிக்க கூடாது என்பது உள்ளிட்ட பல விழிப்புணர்வு கருத்துகளை எடுத்துரைத்தனர்.
தீப்புண் ஏற்பட்டால் சாதாரண தண்ணீரை மட்டுமே கொண்டு கழுவி மருத்துவ மனையில் உரிய சிகிச்சை பெற வேண்டும். வீட்டில் பலகாரம் செய்து போது எண்ணெய் சட்டியில் தீ பற்றிக் கொண்டால் ஈரமான சாக்கை கொண்டு மூட வேண்டும். தண்ணீரை ஊற்றி அணைக்க முயற்சிக்க கூடாது, என்பது உள்ளிட்ட பல்வேறு செயல்முறைகள் செய்து காண்பித்து பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் தீ தடுப்பு, மற்றும் பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிப்பது குறித்து செயல்விளக்கம் செய்தனர்.
இதில், பெரம்பலூர் தீயணைப்பு துறையினர் நிலைய அலுவலர் த.முருகன் தலைமையில் கலந்து கொண்டனர்.