Backward students can apply to study in hostels; Perambalur Collector Information!

பெரம்பலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் / மிக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் 16 பள்ளி மாணவர் விடுதிகள், 10 பள்ளி மாணவியர் விடுதிகள், 4 கல்லூரி மாணவர்கள் விடுதிகள், 6 கல்லூரி மாணவியர்கள் விடுதிகள் என மொத்தம் 36 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

பள்ளி விடுதிகளில் 4ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவர்/ மாணவியர்களும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ/மாணவியர் சேரத் தகுதியுடையவர்கள். பிற்படுத்தப்பட்டோர் / மிகப் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் அனைத்து வகுப்பைச் சார்ந்த மாணவ-மாணவிகளும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

அனைத்து விடுதி மாணவ / மாணவியருக்கு உணவு தங்கும் வசதி, 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு 4 இணைச்சீருடைகள், 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியருக்கு சிறப்பு வழிகாட்டிகள் ஆகிய சலுகைகள் எவ்வித செலவினமும் இல்லாமல் வழங்கப்படுகின்றன.

விடுதிகளில் சேருவதற்கு பெற்றோர் / பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கீ.மீ. க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது.

தகுதியுடைய மாணவ/மாணவியர் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் / காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 15.06.2023க்குள்ளும் கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 15.07.2023க்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ/மாணவியர்கள் விண்ணப்பிக்கும் போது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் ஏதும் அளிக்கத் தேவையில்லை. விடுதியில் சேரும் போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே, மாணவ/மாணவியர் அரசின் இச்சலுகைகளை பெற்று, பயனடையுமாறு கலெக்டர் க.கற்பகம் விடுத்துள்ளள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!