Bangalore’s luxury life in prison Shashikala continues: Revealing the RTI Act
சசிகலாவுக்காக சிறை அதிகாரிகள் விதிகளை மீறி தொடர்ந்து சலுகை வழங்கி வருவது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அம்பலமாகி உள்ளது.
இது தொடர்பாக இந்தியா டுடே இணையதளம் வெளியிட்டுள்ள தகவல்கள்: சிறை விதிகளின்படி நெருங்கிய உறவினர்கள் 4 முதல் 6 பேர் வரை 15 நாட்களுக்கு ஒரு முறை கைதிகளை சந்திக்கலாம். ஆனால் பெங்களூரு சிறை அதிகாரிகள் இதை மீறி சசிகலாவுக்கு தாராளமாக அனுமதி அளித்துள்ளனர்.
ஜூலை 5-ம் தேதியன்று சசிகலாவை 6 பேர் சந்தித்துள்ளனர். வெங்கடேஷ், தினகரன், பழனிவேலு, ராமலிங்கம், ஹூசைன், வெற்றிவேல் ஆகியோர் சசிகலாவை சந்தித்தவர்கள். இதற்கு அடுத்ததாக ஜூலை 11-ம் தேதியன்று சசிகலாவை 7 பேர் சந்தித்துள்ளனர். ஷகிலா, விவேக், கீர்த்தனா, ஜெயா, வெற்றிவேல், தாமரைச்செல்வன் மற்றும் நாகராஜன் ஆகியோர் சசிகலாவை சந்தித்திருக்கின்றனர். சிறைவிதிகளை மீறி 7 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதுவும் அடுத்த வாரமே அனுமதி தரப்பட்டுள்ளது.
கர்நாடகா அதிமுக செயலாளர் புகழேந்தி, ஆகஸ்ட் 2-ம் தேதி சசிகலாவை சந்தித்துள்ளார். அன்று மாலை 4.30 மணி முதல் மாலை 5.15 மணிவரை சசிகலாவை புகழேந்தி சந்தித்து பேசியிருக்கிறார். சிறைவிதிகளின் படி மாலை 5 மணிக்கு மேல் கைதிகளை சந்திக்க முடியாது. அதை மீறி சசிகலாவுக்கு சிறப்பு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
சிறையில் உணவு உள்ளிட்டவை இலவசமாக தரப்படும். அதேநேரத்தில் டூத் பேஸ்ட் போன்றவற்றை கைதிகள் பணம் கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும். ஆனால் சசிகலா இதுவரை எந்த பொருளையும் சிறைக்குள் வாங்கவே இல்லை என்கிறது சிறை நிர்வாகம். அப்படியானால் சிறைக்குள் சசிகலாவுக்குள் அனைத்துமே இலவசமாக கிடைக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது சிறைத் துறை நிர்வாகத்தின் பதில். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.