Bike-car head-on collision near Perambalur; 2 people died!

பெரம்பலூர் மாவட்டம், வி.களத்தூர் அருகே உள்ள பிம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த காத்தமுத்து மகன் சிவசக்தி (22), பிஏ படித்துள்ள இவர் திருப்பூரில் வேலை பார்த்து வந்தார். இதேபோல் அதே ஊரைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவரான பெரியசாமி மகன் தீனதயாளன் (22). கேட்டரிங் முடித்து விட்டு சென்னையில் வேலை பார்த்து வந்தார்.

நண்பர்களான இருவரும் தீபாவளி பண்டிகைக்காக விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த நிலையில், பைக் ஒன்றில், பிம்பலூர் கிராமத்திலிருந்து ரஞ்சன்குடி வழியாக பெரம்பலூரை நோக்கி சினிமா பார்க்க வந்து கொண்டிருந்தனர்.

பைக், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ரஞ்சன்குடி கிராமத்திற்கும்- தேவையூர் கிராமத்திற்கும் இடையே எதிர் திசையில் வந்த போது, திண்டுக்கல்லில் இருந்து சென்னை நோக்கி சென்ற காரும் பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், படுகாயம் அடைந்த சிவசக்தி சம்பவ இடத்திலேயும், படுகாயம் அடைந்த தீனதயாளன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

மேலும் காரில் பயணம் செய்தவர்கள் சீட் பெல்ட் அணிந்திருந்தவர்கள் 2 வயது பெண் குழந்தை உட்பட நான்கு பேர் லேசான காயமடைந்தனர்.

தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மங்களமேடு போலீசார் உயிரிழந்த சிவசக்தி மற்றும் தீனதயாளன் ஆகியோரது சடலங்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பைக் மீது காரை மோதி விபத்தை ஏற்படுத்திய சென்னை செம்பாக்கம், ஏழாவது தெருவைச் சேர்ந்த ஐடி கம்பெனி ஊழியரான உமா நடராஜனை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதி மற்றும் பிம்பலூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!