buggy-government-buses-with-passengers-due-to-time-delay-in-the-arrival-charge-to-the-staff
பெரம்பலூரில் இயக்கப்படும், அரசு பேருந்துகளால் உரிய நேரத்திற்கு பயணிகளை கொண்டு சேர்ப்பதில் தாமதம் ஏற்படுவதாக ஊழியர்கள் குற்றச்சாட்டி உள்ளனர்.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் சி.ஐ.டியூ சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கூட்டம் இன்று மாலை ஆர்.சிங்கராயர் தலைமையில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் ஆர்.சிற்றம்பலம், பொதுச் செயலாளர் எஸ்.சிவானந்தம், திருச்சி சி.ஐ.டி.யூ – வை சேர்ந்த பொறுப்பாளர்கள் ராஜேந்திரன், சீனிவாசன், கரூர் சுப்பிரமணியன், அரியலூர் சந்தானம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
கண்டன கூட்டத்தில் கூறப்பட்டதாவது:
பெரம்பலூர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து இயக்கப்படும் பெரும்பாலான பேருந்துகளில், செல்லும் வேகத்திற்கு ஏற்ப பேருந்தை உடனே கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு தரமற்ற பிரேக்குகளை கமிசனுக்கு ஆசைப்பட்டு பேருந்துகளில் பொருத்தி இருப்பதால் விபத்துகள் நிகழும் ஆபத்து அதிகம் உள்ளது. ஓட்டுநர் உள்ளிட்ட பயணிகள் உயிர் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதால், இதனை தடுக்க வேண்டும், என்றும்,
மத்திய அரசின் வேகக்கட்டுப்பாட்டு கருவி, தனியார் பேருந்துகளிலும் பொருத்த வேண்டும், தனியார் பேருந்துகள் அளவுக்கு அதிகமான வேகத்தில் செல்கிறது. இதனால், விபத்துக்கள் ஏற்படுவது மட்டுமில்லாமல், அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகளுடன் போட்டி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பாராபட்சமான நடவடிக்கையால், அரசு பேருந்துகளின் வருவாய் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசு பேருந்துகள் தமிழக அளவில் கோடிக்கணக்கான ரூபாய் நட்டத்தை சந்திக்கிறது. குறைந்து வேகத்திலேயே அரசு பேருந்துகள் இயங்குவதால் உரிய இடத்திற்கு செல்ல வழக்கத்தை காட்டிலும் கூடுதலான நேர பயணம் ஏற்படுவதால் பயணிகளுக்கு சலிப்பு ஏற்படுவதுடன் உரிய காலத்தில் செல்ல முடியமால் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
அளவுக்கு அதிகமான அரசியல் தலையீடு;
பெரம்பலூர் பணிமனையில் கிளை மேலாளர் அதிமுகவிற்கு லஞ்சம் வாங்கி கொடுக்கும் ஏஜண்டு போன்றும், பிற கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்க பணியாளர்களை பழிவாங்கும் நோக்குத்துடன் தரமற்ற முறையில் நடத்துவதாகவும், பேருந்து ஓட்டுநர் மற்றும், நடத்துனர்களுக்கு உரிய ஓய்வு (தூக்கம்) வழங்கப்படாமல் தொழிலாளர்களை வேலை வாங்குவதால் விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிக உள்ளது. மேலும், வழித்தடங்களுக்கு ஏற்ப ரூ. 5 ஆயிரம் முதல் ரூ 20 ஆயிரம் வரை கையூட்டு பெற்றுக் கொண்டு பணி செய்ய வழித்தடங்களை ஓட்டுநர் நடத்துனர்களுக்கு ஒதுக்குவதாகவும், புதிய தொழிலாளர்களை சேர்க்க 2 லட்சம் முதல் 3 முதல் லட்சம் வரை கையூட்டு பெறுவதாகவும், இந்தப் பணம் போக்குவரத்துறை யில் உள்ள முக்கிய பிரமுகர்கள் அமைச்சர்கள் பங்கு போட்டு கொள்வதாகவும்,
240 நாட்கள் பணி நாட்கள் பணி செய்தவர்களுக்கு உரிய பணி நியமன ஆணை வழங்காமல் அலைக்கழிப்பதாகவும், ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்ட பணிகளுக்கு திறமை அடிப்படையில் பணி வழங்காமல், லஞ்சம் கொடுப்பவர்களுக்கே முன்னுரிமை கொடுத்து பணி வழங்குவதாகவும்,
பயணிகள், நடத்துனர்கள் குழம்பும் வகையில் உரிய கட்டணத்திற்கு உரிய தொகை உடைய ஒரே பயணச்சீட்டு வழங்காமல், 2 க்கும் மேற்பட்ட பயண சீட்டுகள் வழங்குவதால், நிர்வாக கோளாறு வாய்ப்பு உள்ளதாகவும், 24 ஆண்டுகள் பணிபுரிந்த நடத்துனர்களையே பயணச் சீட்டு பரிசோதகராக நியமிக்கமால், தொழில்நுட்ப பணியாளர்களை நியமனம் செய்வதால் பெரும்ஏ சிரமம் ஏற்படுவதாக குற்றம் சாட்டி சி.ஐ.டி.யூ தொழிற்சங்கம் சார்பாக கண்டன கூட்டத்தில் தெரிவித்தனர்.
அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகளின் கைப்பாவையாக செயல்படாமல் நியாயமாக செயல்பட வேண்டும். தொழிலாளார் நலன் காக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில், ஏராளமான போக்குவரத்து தொழிலாளார்கள் கலந்து கொண்டனர். பெரம்பலூர் இளங்கோவன் நன்றி கூறினார்.