Bus-moped collision near Perambalur; Two people died in the accident; Relatives who smashed the bus!
பெரம்பலூர் அருகே உள்ள ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல் மகன் கரிகாலன் (45), விவசாயியான இவர் ஆலம்பாடி கிராமத்தில் இருந்து பெரம்பலூரை நோக்கி தனது வாகனத்தில் வந்தார். அப்போது, சேலம் மாவட்டம், பள்ளப்பட்டியை சேர்ந்த ஜோசியரான சோலைராஜா (73) நீரோட்டம் பார்ப்பதற்காக ஆலம்பாடி கிராமத்திற்கு வந்தவர், மீண்டும் சொந்த ஊர் செல்வதற்காக கரிகாலன் வந்த பைக்கில் லிப்ட் கேட்டு பின்னால் அமர்ந்து கொண்டார். இருவரும் மொபட்டில் பெரம்பலூர் நோக்கி வந்து கொண்டிருந்த போது, பெரம்பலூரில் இருந்து மேலப்புலியூர் நோக்கி அதிவேகமாக சென்ற தனியாருக்கு சொந்தமான மினி பஸ் ஒன்று கரிகாலனும், முதியவர் சோலைராஜாவும் வந்த டூவீலர் மீது அதிவேகமாக மோதிக் விபத்திற்குள்ளானது.
இதில், கரிகாலனும், சோலைராஜாவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த கரிகாலனின் உறவினர்கள், ஆலம்பாடி பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்தில் ஒன்று திரண்டு விபத்துக்கு காரணமான மினி பஸ்சின் கண்ணாடியை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர். இதனால் அங்கு பதட்டமும், பரபப்பும் நிலவியது.
இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். உயிரிழந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மொபட்டில் வந்த விவசாயியும் அவரிடம் லிப்ட் கேட்டு வந்த ஜோசியரும் பஸ் மோதி உயிரிழந்த சம்பவம் இன்று இரு குடும்பத்தாரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.