Business establishments fined for using single-use plastic: Perambalur Collector Info!

பெரம்பலூர் மாவட்டத்தில் பாதுகாப்பான சுகாதாரம் மற்றும் தூய்மையான சூழல் ஆகியவைகளை பின்பற்றிட நம்ம ஊரு சூப்பரு என்ற பிரச்சார இயக்கம் 01.05.2023 முதல் 15.06.2023 வரை நடைபெற உள்ளது. இப்பிரச்சார இயக்கத்திற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் கலெக்டர் கற்பகம், தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் கற்பகம் பேசியதாவது:

நம்ம ஊரு சூப்பரு பிரச்சார முனைப்பு இயக்கத்தினை அனைத்து கிராமங்களிலும் 100 சதவிகிதம் முழுமையாக செயல்படுத்தி கிராமங்கள் தோறும் துப்புரவு நடவடிக்கைகள் மேற்கொண்டு சுத்தம் சுகாதாரத்தை பின்பற்ற வேண்டும். அதன்படி, கிராம ஊராட்சிகளில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், பொது இடங்கள், அரசு கட்டிடங்கள் மற்றும் நீர் நிலைகள் போன்றவற்றை பொதுமக்களோடு கிராம துப்புரவு பணியாளர்கள் ஒருங்கிணைந்து அரசு பணியாளர்களும் தூய்மைப்படுத்தும் பணியினை மேற்கொள்ள வேண்டும். இப்பணிகளை அனைத்து துறைகளின் அலுவலர்களைக் கொண்டு கண்காணிக்க வேண்டும்.

நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் உள்ள கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியினை பயன்படுத்தினால் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். கிராமங்களில் உள்ள தனிநபர் வீடுகளில் பயன்படுத்தப்பட்டுவரும் செப்டிக் டேங்க் கழிவுகளை நீர்நிலைகளில் மற்றும் பொது இடங்களில் வெளியேற்றப்படும் நிலையினை தடுத்திடும் பொருட்டு அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் நகராட்சி நிர்வாகத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் மலக்கசடு மேலாண்மை மையத்திற்கு அனுப்பி வைத்திட வேண்டும். அவ்வாறு மீறி செயல்படும் லாரி உரிமையாளர்கள் மீது சுகாதார சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்படும், என பேசினார்.
இக்கூட்டத்தில் வருவாய் , ஊரக வளர்ச்சி, உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!