Candidates from Kunnam constituency who contested in the mosque and collected votes!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதியில் அதிமுக சார்பில் பெரம்பலுர் மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி.இராமச்சந்திரனும், திமுக சார்பில் அக்கட்சியின் அரியலூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான எஸ்.எஸ். சிவசங்கரனும், நீயா நானா போட்டியில் தீவிர களம் கண்டு வருகின்றனர். வாக்கு சேகரிப்பில் அதிமுக, திமுக இரு கட்சியினரும் சாதனைகளை சொல்லி தொகுதியில் திட்டமிட்டு தினந்தோறும் வலம் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் மதியம் தொழுகைக்கு வரும் இஸ்லாமியர் வாக்குகளை சேகரிக்க லப்பைக்குடிக்காடு கிழக்கு மசூதியில் திமுக வேட்பாளர் சிவசங்கரனும், மேற்கு பள்ளிவாசலில ராமச்சந்திரனும் பள்ளிவாசல் நிர்வாகிகளை சந்திந்ததோடு, அங்கு தொழுகை முடிந்த பின்னர் அங்கிருந்த இஸ்லாமிய மதத்தவர்களிடம் வாக்குகளை சேகரித்தனர்.

பொதுவாக இரு மசூதிகளிலும், லப்பைக்குடிக்காட்டிற்கான நலத்திட்டங்கள், பாதாள சாக்கடை, லப்பைக்குடிக்காடு அருகே செல்லும் வெள்ளாற்றில் இருந்து மற்ற ஊர்களுக்கு குடிநீர் எடுத்து செல்வதை தடுத்த நிறுத்த வேண்டும், ஆற்று புறம்போக்கில் வசிக்கும் தங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வேட்பாளர்களிடம் வலியுறுத்தினர். அதிமுக, திமுக கட்சி நிர்வாகிகள் அந்த வேட்பாளர்களுடன் சென்றிருந்தனர்.

இஸ்லாமியர் தெருக்களில் வாக்குகள் சேகரிக்க பெரும்பாலும் கட்சிகள் செல்வதில்லை. மாறாக மசூதியில் வாக்குகளை காலம் காலமாக சேகரித்து வருகின்றனர். முன்னதாக இன்று மதியம் வி.களத்தூர் பள்ளிவாசலில் பெரம்பலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.தமிழ்ச்செல்வனும் வாக்குகள் சேகரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்ககது.

முதன்முறையாக, கரூர் மாவட்டத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை மட்டுமே இஸ்லாமியர் தெருக்களில் சென்று அங்கிருக்கும் சகோதரிகளிடம் முத்தலாக் குறித்து எடுத்துரைத்து வாக்குகள் சேகரிப்பேன், ஜாமத்தில் இந்தியா இல்லை, இந்தியாவில்தான் ஜமாத் உள்ளது என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!