Capture of tipper lorries near Perambalur
பெரம்பலூர் அருகே அதி வேகம் மற்றும் அதிக பாரத்துடன், பொதுமக்களுக்கு இடையூறாக சென்று வந்த லாரிகளை பொதுமக்கள் சிறைப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் அருகேயுள்ள கவுள்பாளையம், நெடுவாசல், எறையூர் மற்றும் கல்பாடி உள்ளிட்ட சில கிராமங்களை ஒட்டிய பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மற்றும் கிரஷர்கள் உள்ளன. இந்த குவாரிகளில் இருந்து கற்கள் மிகப்பெரிய அளவில் வெடி வைத்து வெட்டி எடுக்கப்படுகின்றன கற்கல் மிகப்பெரிய டிப்பர் லாரிகளில் அதிக பாரம் ஏற்றி செல்லப்படுகிறது. அடிக்கடி விபத்து நடப்பதாலும் இவ்வாறு செல்லும் வாகனங்கள் அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் செல்வதால் பொதுமக்கள் அந்த சாலைகளில் பயணிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் கிராம சாலைகள் சேதமடைவதோடு, ஆடு மாடு உள்ளிட்ட கால்கநடைகள், சிறுவர்கள், வயதானவர்கள் மற்றும் பெண்கள் என பலதரப்பட்டவர்களும் சாலையில் நடமாட முடியாத பயம் கலந்து சூழல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பலமுறை துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், சம்பந்தப்பட்ட லாரி ஓட்டுனர்களிடம் அறிவுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்பகுதி கல்குவாரிகள் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சியினர்க்கு கல் குவாரிகள் செயல்பட்டு வருவதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனப் போக்கை கடைபிடிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 20க்கும் மேற்பட்ட லாரிகளை சிறைபிடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் மருவத்தூர் காவல்துறையினர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இனி இந்த வாகனங்களை மெதுவாகவும், குறைவான பாரம் ஏற்றியும் செல்லுமாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் சிறைபிடிக்கப்பட்ட லாரிகளை விடுவித்து, கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.