பெரம்பலூர் அருகே உள்ள புகழ்பெற்ற சிறுவாச்சூர் மதுரகாளிஅம்மன் திருக்கோவில் உள்ளது. இன்று சித்திரை பவுர்ணமி விழாவை ஒட்டி சுமங்கலி பெண்கள் ஒரு கோடி குங்கும அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர்.
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள ஆதிசங்கரர் வழிபட்ட பெருமை பெற்ற மதுரகாளிஅம்மன் கோவிலில் சித்திரை பவுர்ணமி விழா 2 நாட்களாக நடந்தது.
இதனை முன்னிட்டு சிறுவாச்சூர் மதுரகாளிஅம்மன் கோவில் சென்னை கோட்டூர் ஸ்ரீமகாமேரு மண்டலி சார்பில் உலக சுபிக்சத்திற்காகவும், வறட்சியால் பாதிக்கப்படும் நிலையில் மழை பெய்து தனதானியம் பெருகிடவும், உணவுப்பொருட்கள், காய்கறிகள், கனிகள் பொதுமக்களுக்கு குறைவில்லாமல் கிடைக்கவும் முதல்நாள் ஸ்ரீசண்டி ஹோமம் நடந்தது. ஹோமம் நடந்தபோது 3-வது காலபூஜையின்போது இடிமின்னலுடன் பலத்தமழை பெய்தது. இருப்பினும் மழைக்கு இடையே ஹோமமும் நள்ளிரவு வரை நடந்தது.
2-வது நாளான சித்திரை பவுர்ணமி திதியில் இன்று காலை தொடங்கி மாலை வரை ஸ்ரீசாகம்பரி, ஸ்ரீஅன்னபூர்ணா தெய்வங்களுக்கு லட்சார்ச்சனையும், ஸ்ரீலலிதா நாமாவளி ஒருகோடி குங்கும அர்ச்சனையும் மாலை வரை நடந்தது.
முன்னதாக குங்கும அர்ச்சனையில் பங்கேற்ற சுமங்கலி பெண்களுக்கு சுவாஸினி என்று அழைக்கப்படும் பாதபூஜை மஞ்சள் மற்றும் குங்குமத்தால் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பலநூற்றுக்கணக்கான சுமங்கலி பெண்கள் கோவிலில் தங்கரதம் மண்டபத்தில் நடந்த குங்குமஅர்ச்சனை நிகழ்ச்சியில் பங்கேற்று ஸ்ரீமதுரகாளி அம்மனுக்கு ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்துடன் ஒருகோடி குங்கும அர்ச்சனை நடத்தினர்.
நிகழ்ச்சிக்கு ஸ்ரீமதுராம்பிகாநந்த பரஹ்மேந்திர சரஸ்வதிசுவாமிகள் முன்னிலை வகித்தார் பெரம்பலூர் மாவட்ட பிராமணர் சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் அய்யர் மற்றும் திரளான சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டனர். கோவில் திருமண மண்டபத்தில் மகா அன்னதானமும் நடந்தது.