Chief Minister’s State Youth Award for 2024 : Perambalur Collector Info!

Model
சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, ”முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இந்த விருது, ரூபாய் 1,00,000/- ரொக்கம், மற்றும் பாராட்டுப் பத்திரம், பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும்.
அதன்படி, 2024 – ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது எதிர்வரும் 15.08.2024 அன்று நடைபெறும் சுதந்திரதின விழாவில் வழங்கப்ட உள்ளது. இவ்விருது தொடர்பாக கீழ்க்காணும் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண்/பெண் ஆகியோர் விண்ணப்பிக்கவும். கடந்த ஏப்ரல் 1-ந் தேதி, 2023 (01.04.2023) அன்று 15 வயது நிரம்பியவராகவும், மார்ச் 31-ந் தேதி, 2024 (31.03.2024) அன்று 35 வயதுக்குள்ளாகவும் இருத்தல் வேண்டும்.
கடந்த நிதியாண்டில் (2023-2024) அதாவது 01.04.2023 முதல் 31.03.2024 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். (சான்று இணைக்கப்பட வேண்டும்.) விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு, கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். மத்திய/மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள்/கல்லுாரிகள்/பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது.
விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in என்ற இணைய தளத்தில் 01.05.2024 முதல் கடைசி நாள் 15.05.2024 மாலை 4.00 மணிக்குள் சமர்பிக்க வேண்டும்.
இணையத்தில் சமர்பிக்கப்பட்ட விண்ணப்ப படிவம் நகல் மற்றும் உரிய ஆவணங்கள் 3 நகல்கள், 3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, காவல் துறையிடமிருந்து சரிபார்ப்பு சான்றிதழ் ஆகியவைகளை 18.05.2024 மாலை 4.00 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ளள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.