Construction of new lakes, ponds, dredging works in Perambalur District: Collector inspection!
பெரம்பலுார் மாவட்டத்தில் அம்ரித் சரோவர் திட்டத்தின் மூலம் 73 குளங்கள் சுமார் ரூ.7.93கோடி மதிப்பில் துார்வாரும், புதிய குளங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது – வேப்பந்தட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் அமிரித்சரோவர் திட்டத்தின் மூலம் துர்ர்வாரப்பட்டுவரும் ஏரி மற்றும் குளங்களின் பணி முன்னேற்றம் குறித்து, வேப்பந்தட்டைஒன்றியத்திற்குட்பட்ட அனுக்கூர், பிரம்மதேசம் பகுதிகளில் அம்ரித் சரோவர் திட்டத்தின் குளங்கள் மற்றும் ஏரிகள் துார்வாரப்பட்டுவரும் பணிகளை கலெக்டர் க.கற்பகம் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அனுக்கூர் ஊராட்சியில் செல்லியம்மன் கோவில் அருகில் உள்ள குட்டையினை ரூ.5.80 லட்சம் மதிப்பில் துார்வாரி ஆழப்படுத்தி கரைகளை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதையும், குளத்தின் பரப்பளவில் எந்த மாற்றமும் இல்லாத வகையில் குளக்கரைக்கு அருகே உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, முழுப்பரப்யையும் ஆழப்படுத்தி துார்வாரி, குளம் நிரம்பி அருகில் உள்ள குட்டைகளுக்குச் செல்லும் வகையில் பாதை அமைக்க வேண்டும் எனவும்,
பிரம்மதேசம் சின்ன ஏரி ரூ.4.15 லட்சம் மதிப்பில் முழுமையாக துார்வாரப்பட்டு, ஆழப்படுத்தப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டிருப்பதை பார்த்து சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவரை பாராட்டினார். மேலும், செல்லியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும், ஊர் பொதுமக்களுக்கும் பயன்படும் வகையில் இங்கு சேமிக்கப்படும் நீர் பயன்படுத்தப்பட வேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அமரும் வகையில் குட்டையின் கரையில் படர்ந்து விரிந்துள்ள ஆலமர நிழலில் இருக்கைகள் அமைக்கவும் அறிவுறுத்தினார்.
தொடந்து பிரம்மதேசம் ஊாட்சியில் வடக்குமாதவி கிராமத்தில் உளள் 1.2 ஏக்கர் பரப்பிலான குளம் முழுமையாக துார்வாரப்பட்டிருப்பதையும், மேலும் அனுக்கூர் அ.குடிகாடு கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சிக்கு சொந்தமான கிணற்றிற்கு ரூ.1லட்சம் மதிப்பில் கம்பி வேலியால் ஆன மூடி அமைக்கும் பணிகளையும் நேரில் பார்வையிட்டார்.
பின்னர் கலெக்டர் கற்பகம் தெரிவித்ததாவது:
பெரம்பலுார் மாவட்டத்தில் நீர்ஆதாரங்களை பாதுகாப்பதற்கும், கிராம ஊராட்சிகளில் புதிய குளங்கள் அமைப்பதற்கும், ஏற்கனவே உள்ள குளங்களை முழுமையாக புனரமைப்பதற்கும் பல்வேறு தொடர்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக அம்ரித் சரோவர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இன்று வேப்பந்தட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள குளங்கள் துார்வாரப்பட்டிருப்பதை பார்வையிட்டோம். அம்ரித் சரோவர் திட்டத்தின் மூலம் பெரம்பலுார் ஒன்றியத்தில் 17 பணிகள் ரூ.1,64,78,000 மதிப்பிலும், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 25 பணிகள் ரூ.2,57,04,900 மதிப்பிலும், வேப்பூர் ஒன்றியத்தில் 18 பணிகள் ரூ.2,26,69,170 மதிப்பிலும், ஆலத்துார் ஒன்றியத்தில் 13 பணிகள் ரூ.1,44,32,000 மதிப்பிலும் என மொத்தம் 73 பணிகள் ரூ.7,92,84,070 (சுமார் 7.93 கோடி) மதிப்பில் நடைபெற்று வருகின்றது. இதில் 23 பணிகள் முடிவுற்றுள்ளது.
இந்த பணிகளில் பெரம்பலுார் ஒன்றியத்தில் ரூ.1,44,71,000 மதிப்பில் 12 புதிக குளங்களும், வேப்பூர் ஒன்றியத்தில் ரூ.18,01,200 மதிப்பில் 6 புதிக குளங்களும், ஆலத்துார் ஒன்றியத்தில் ரூ.69,94,000 மதிப்பில் 5 புதிக குளங்களும், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் ரூ.78,16,000 மதிப்பில் 7 புதிக குளங்களும் என மொத்தம் 30 புதிய குளங்கள் ரூ.4,72,93,000 மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.
மழைகாலம் வருவதற்குள் மாவட்டத்தின் அனைத்துப்பகுதிகளிலும் அம்ரித் சரோவர் திட்டத்தின் மூலம் புதிய குளங்கள் அமைக்கும் பணிகளும், ஏற்கனவே உள்ள குளங்கள் மற்றும் ஏரிகளை துார்வாரும் பணிகளும் முடிக்கப்படும், என தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது பயிற்சி துணை ஆட்சியர் பிரியதர்ஷினி, வேப்பந்தட்டை வட்டாட்சியர் துரைராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மரியதாஸ், செல்வமணி, ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம்(பிரம்ம தேசம்), முதலி (அனுக்கூர்), உதவி பொறியாளர் மனோகரன் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.