Cook work in Chief Minister’s breakfast program : Perambalur Collector Information!

பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் ஜூன் 2023 முதல், ஊரக மற்றும் பேரூராட்சிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு செயல்படுத்தப்படவுள்ளது.

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் சமையலராக தேர்வு செய்யப்படவுள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கீழ்கண்ட தகுதிகளை கொண்டிருக்க வேண்டும்.

பெரம்பலூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் அனுபவமுள்ள சுய உதவிக்குழு / ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு / பகுதி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினராக இருத்தல் வேண்டும்.

சமையலர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் அதே கிராம ஊராட்சியில் / நகர்ப்புற பகுதியில் வசிப்பிடமாக கொண்டு வசிப்பவராக இருக்க வேண்டும். இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது.

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினரின் குழந்தை அதே பள்ளியில் 1 முதல் 5 வரை படிப்பவராக இருத்தல் வேண்டும். மேலும், குழந்தை படிப்பு முடித்து வேறு பள்ளிக்கு (அல்லது) 6-ஆம் வகுப்பிற்கு மேல் உள்ள வகுப்பிற்கு மாறும் பொழுது சமையலர் பணியில் ஈடுபட்டிருப்பவர் மாற்றப்பட்டு தகுதியான வேறு நபர் நியமிக்கப்படுவார்.

காலை உணவை சமைப்பதற்கும் பரிமாறுவதற்கும் தேர்வு செய்யப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உணவு தயாரிப்பதில் போதுமான முன் அனுபவமும், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10-ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். மலைப்பாங்கான பகுதிகள் மற்றும் பழங்குடியின கிராமங்களில் 10 -ஆம் வகுப்பு வரை பயின்ற மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் இல்லையெனில் 8-ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்.

சமையலர் பணிக்கு தேர்வு செய்யப்படும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தங்கள் பெயரில் இணைய வசதியுடன் கூடிய ஆண்ட்ராய்டு மொபைல் போன் வைத்திருப்பதோடு அதை உபயோகப்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் கடந்த 3 ஆண்டுகளில் பெற்ற கடன்களை தவணை தவறாது நிலுவையின்றி செலுத்தியிருப்பவராக இருக்க வேண்டும்.

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் உறுப்பினர் சார்ந்துள்ள மகளிர் சுய உதவிக்குழு, காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு போதுமான நிதி மூலதனத்தை கொண்டிருக்க வேண்டும்.

இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான உறுப்பினர்களின் விருப்பம் மற்றும் அது தொடர்பான தீர்மானத்தை தீர்மான பதிவேட்டில் பதிவு செய்திருக்க வேண்டும்.

மேற்கண்ட தகுதிகளின் அடிப்படையில் மட்டுமே ஊராட்சி அளவிலான தேர்வுக்குழுவால் சமையலர் பணி நியமனம் செய்யப்படும். மேற்படி, சமையலர் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடைய மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட ஊராட்சி அளவிலான குழுவிடம் 23.05.2023-க்குள் விண்ணப்பிக்கலாம். பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தெரிவித்துள்ளார்கள்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!