Deer hunting near Perambalur
பெரம்பலூர் மாவட்டம் மங்கலமேடு அருகே ரஞ்சன்குடி கிராம பகுதியிலுள்ள வனக் காப்பு காட்டில் மான்களை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில், மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் அறிவுறுத்தலின் பேரில் வனச்சரக அலுவலர் சசிகுமார் தலைமையில் சம்மந்தப்பட்ட வனப்பகுதியில் வனப்பாதுகாவலர் பொன்னுசாமி, வனவர் பாண்டியன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுட்டிருந்தனர்.
அப்போது, வனப்பகுதியில் 6 பேர் கொண்ட கும்பல் 5 வயதுடைய அழகிய ஆண் புள்ளி மானை நாய்களை வைத்து துரத்தி பிடித்து, கழுத்தை அறுத்து தூக்கி வீசி விட்டு, உடல் பகுதியை ஒரு ஆட்டோவில் ஏற்றி கொண்டு திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் நோக்கி சென்றுள்ளனர்.
இந்நிலையில் வனத்துறையினர் ஆட்டோவை பின்தொடர்ந்து துரத்தி வருவதை பார்த்ததும் மான் வேட்டை கும்பல் வாலிகண்டபுரம் என்ற இடத்தில் உள்ள மேம்பாலத்தில் மானின் உடலை தூக்கி வீசி விட்டு தப்பியோடியது.
இதனையடுத்து மானின் உடலை கைப்பற்றிய வனத்துறையினர் தப்பிச்சென்ற 6 பேரில் புதுநடுவலூர் கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் மகன் தினேஷ் (வயது 19), பழனியாண்டி மகன் பாலமுருகன்(28) ஆகிய இருவரை மட்டும் கைது செய்தனர்.
மேலும், தப்பியோடி தலைமனைவான ரெங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன், மணிகண்டன், மதி, துற்று ஆகிய 4 பேரையும் வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் வேட்டைக்கு பயன்படுத்திய இரண்டு வலைகள், கன்னி வெடிகள், வெடி பொருட்கள், கத்தி, அறிவாள் மற்றும் நாய்களை பறிமுதல் செய்துள்ளனர்.
நாய்களை வைத்து மானை வேட்டையாடி அதன் தலையை கொடூரமாக வெட்டி வீசிய சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், இந்த மான் வேட்டை கும்பல் மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாக ஏராளமான மான்களை வேட்டையாடி மாமிசத்தை விலைக்கு விற்று வந்தது தெரிய வந்துள்ளது.