Demands in Chennai on March 6: Electricity Board pensioners welfare organization Resolution passed
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 6 இல் சென்னையில் போராட்டம் பெரம்பலூர் மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு 3ஆம்ஆண்டு பேரவைக்கூட்டத்தில் தீர்மானம்
தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பெரம்பலூர் அரியலூர் வட்ட 3ஆம் ஆண்டு பேரவைக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை, துறைமங்கலம் சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது.
வட்ட செயலாளர் எ.கணேசன் செயலாளர் அறிக்கை சமர்ப்பித்து தலைமை வகித்தார். எம்.கருணாநிதி அஞ்சலி தீர்மானம் நிறைவேற்றினார்.வட்ட பொருளாளர் பி.முத்துசாமி வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தார். மாநில பொதுச்செயலாளர் எஸ்.ஜெகதீசன் மண்டல தலைவர் பஷீர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
7வது ஊதியக்குழுவின் பரிந்துரையினை அமல்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிடவேண்டும், புதிய ஓய்வதியத்தின் கீழ் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வு காலப் பயன்களை உடனே வழங்க வேண்டும், சொசைட்டி ஒப்பந்த தொழிலாளர்களின் முந்தைய பணிக்காலத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு ஓய்வூதியம் வழங்க வேண்டும்,
அரசின் ஆணைக்கேற்ப மருத்துவக்காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பொதுத் துறைகளை தனியார் மயமாக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. மேலும் மார்ச் 6 ஆம் தேதி 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையில் தலைமை மின்வாரிய அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளதால் திரளாக கலந்து கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட செயலாளர்கள் சிஐடியு ஆர்.அழகர்சாமி, மின்ஊழியர் மத்திய அமைப்பு எஸ்.அகஸ்டின், ஓய்வு பெற்றோர் கூட்டமைப்பு ஆர்.முருகேசன், போக்குவரத்துகழகம் பி.கிருஷ்ணசாமி உள்ளிடோர் முன்னதாக வாழ்த்துரை வழங்கினர்.