DMK leader Stalin speaks of India’s religious divide BJP state secretary alleges
திமுக தலைவர் ஸ்டாலின் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவை மதரீதியாக பிளவுபடுத்தும்நோக்கிலும் பேசி வருகிறார் என பாஜக மாநில செயலாளர் கார்த்தியாயினி குற்றம்சாட்டினார்.
பெரம்பலூருக்கு வந்திருந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளரும் வேலூர் மாநகராட்சி முன்னாள் மேயருமான கார்த்தியாயினி நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;
அண்மையில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள குடியுரிமை சட்டம் மக்களை அச்சமின்றி வாழ வழிவகுக்கும் சட்டமே தவிர ஒரு குறிப்பிட்ட சாராரின் குடியுரிமையை பறிக்கும் சட்டம் அல்ல. இதனால் இந்தியாவில் வசிக்கும் குடிமக்கள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. குடியுரிமை வேண்டும் என கேட்டு விண்ணப்பிக்கும் வெளிநாட்டில் வசிக்கும் மக்களுக்கான சட்டம் அது. திமுக தலைவர் ஸ்டாலின் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவை மதரீதியாக பிளவுபடுத்தும்நோக்கிலும் பேசி வருகிறார். வேண்டுமென்றே பொய்ப்பிரச்சாரம் செய்து வருகிறார்.
காங்கிரஸ் ஆட்சியிலேயே குடியுரிமை சட்டம் நம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. குடியுரிமை சட்டத்தால் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. இதை இஸ்லாமிய சகோதரர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். இந்தியா மதச்சார்பற்ற, ஜனநாயக நாடு என்பதிலும், இது இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், இந்துக்கள் என அனைவருக்குமானது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்தியா குறிப்பிட்ட மதத்தினருக்கான நாடு அல்ல. இந்த சட்டம் குறித்து போதிய தெளிவில்லாமல் இஸ்லாமியர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். காலப்போக்கில் அவர்கள் புரிந்துக் கொண்டு தெளிவடைந்துவிடுவார்கள் என நம்புகிறேன். இவ்வாறு தெரிவித்தார்.
இச்சந்திப்பின்போது பாஜக மாவட்ட தலைவர் சி.சந்திரசேகரன், நகர தலைவர் பார்த்தசாரதி, பொதுக்குழு உறுப்பினர் அசோகன் ஆகியோர் உடனிருந்தனர்.