E-service center for all; Perambalur Collector Information!

பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டமானது படித்த இளைஞர்களையும் தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையிலும், இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ சேவை மையங்களை நிறுவி செயல்படுத்த இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்ஆளுமை முகமையானது, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், மீன்வளத்துறை, கிராமப்புற தொழில் முனைவோர்கள், ஆகிய நிறுவனங்களின் மூலம் இ-சேவை மையங்களை செயல்படுத்தி மக்களுக்கான அரசின் சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்கி வருகின்றது. மேலும், அரசின் இணையதள சேவைகளை குடிமக்களுக்கான பொது இணையதளம் வாயிலாகவும் வழங்கி வருகின்றது.
இதனை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது, “அனைவருக்கும் இ-சேவை மையம்” திட்டத்தின் மூலம் அனைத்து குடிமக்களும் இ சேவை மையங்கள் தொடங்கி பொதுமக்களுக்கான அரசின் இணையவழி சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்குவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் நோக்கமானது, அனைத்து ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் இ சேவை மையங்களை ஏற்படுத்திடவும், மாவட்டங்களில் இ சேவை மையங்களின் எண்ணிக்கையினை அதிகரித்து இ சேவை மையங்களில் பொதுமக்கள் காத்திருக்கும் நேரத்தினை குறைத்து, மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்குவதாகும்.
எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் “அனைவருக்கும் இ-சேவை மையம்” திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இணைய முறையில் மட்டுமே விண்ணப்பங்களை பதிவு செய்ய இயலும். இத்திட்டத்தை பற்றிய கூடுதல் தகவல் பெறவும், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் https://www.tnesevai.tn.gov.in/ / https://tnega.tn.gov.in/ என்ற இணையதள முகவரிகளை பயன்படுத்தவும். விண்ணப்பங்களை 15.03.2023 (நேரம்: 11.30) முதல் 14.04.2023 (நேரம்: 20.00) வரை மட்டுமே பதிவு செய்ய இயலும்.
கிராமப்புறங்களில் இ சேவை மையம் செயல்படுத்துவதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.3,000-ஆகும் மற்றும் நகரப்புறத்திற்கான கட்டணம் ரூ.6,000- ஆகும். இவ்விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும். மேலும், விண்ணப்பதாரருக்குறிய பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் ஆனது விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!