பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் நந்தக்குமார் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட மின் ஆளுமை சங்கம் மூலமாக மொத்தம் 162 அரசு இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் கிராம ஊராட்சிகளில் 54 மையங்கள் வேளாண்மை கூட்டுறவு கடன் வழங்கும் சங்கங்கள் மூலமாகவும், 103 மையங்கள் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலமாகவும் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர 4 மையங்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலமாக வட்டாச்சியர் அலுவலகங்களிலும், 1 மையம் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மூலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் சேவைகள் வழங்கி வருகின்றன.
இச்சேவை மையங்கள் மூலமாக வருவாய்த்துறையின் சான்றிதழ்கள், சமூக நலத்துறையின் திருமண நிதி உதவி திட்டம், இணைய வழி பட்டா மாறுதல் போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தற்போது, அரசு இ-சேவை மையங்களின் மூலமாக மின்கட்டணமும் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்விளைவாக, நுகர்வோர் மின்கட்டணம் செலுத்த மின்சார வாரிய அலுவலகங்களுக்கு நீண்ட தூரம் செல்லாது, தங்களது இல்லத்திற்கு அருகாமையில் உள்ள அரசு இ-சேவை மையத்தின் சேவையை பயன்படுத்தி தங்களது மின்கட்டணத்தை செலுத்தலாம்.
பொதுமக்கள் மேற்கண்ட அரசு இ-சேவை மையங்களை மின்கட்டணம் செலுத்த பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.










kaalaimalar2@gmail.com |
9003770497