Excavation of land from Kottarai Reservoir to build canal for irrigation: Perambalur Collector survey!

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், கொட்டரை நீர்த்தேக்கத்திலிருந்து, பாசனத்திற்காக கால்வாய் அமைப்பதற்கான நிலம் எடுக்கும் பணிகளை துரிதப்படுத்துவதற்காக கலெக்டர் கற்பகம் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

மருதையாற்றின் குறுக்கே ரூ.92.70 கோடி மதிப்பில் சுமார் 815 ஏக்கர் பரப்பளவில் 212.475 மில்லியன் க.அடி நீர் தேக்கும் வகையில் கொட்டரை நீர்த்தேக்கமானது கட்டப்பட்டுள்ளது. கொட்டரை, ஆதனூர், சாத்தனூர், கூடலூர், புஜங்காரநல்லூர், கூத்தூர், அழகிரிபாளையம், தொண்டப்பாடி, பிலிமிசை ஆகிய 9 கிராமங்கள் பயனடையும் வகையிலும், சுமார் 4,194 ஏக்கர் பரப்பளவில் விவசாய பாசனம் பெறும்.

அணை மற்றும் பாசன வாய்க்கால் அமைப்பதற்காக தேவையான நிலம் 893.39 ஏக்கர் கையகப்படுத்தும் பணிகளுக்கு ரூ.56.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் 742 ஏக்கர் நிலம் எடுக்கும் பணிகள் முடிவுற்றுள்ளது.

நீர்த்தேக்கத்தினை பார்வையிட்ட கலெக்டர் , மீதமுள்ள 151 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்தி முடிக்க வேண்டும் என்றும், பிரிவு வாய்க்கால், மதகுகள் அமைப்பதற்கான பணிகளை முடித்து விவசாய பயன்பாட்டிற்கு தண்ணீரை பயன்படுத்தும் வகையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நீர்வளத் துறை செயற்பொறியாளருக்கு உத்தரவிட்டார்.

நீர்த்தேக்கத்தை சுற்றியுள்ள கருவேல மரங்களை 15 தினங்களுக்குள் அகற்றவும், நீர்த்தேக்கத்தைச் சுற்றியுள்ள கரைகளை வலுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

கொட்டரை அணையிலிருந்து கால்வாய் அமைப்பதற்கான பணிகளுக்கு விவசாய பெருமக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்றும், அலுவலர்கள் விவசாயிகளுடன் கலந்து பேசி பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் கேட்டுக் கொண்டார்.

வருவாய், பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சசி துறையை சேர்ந்த அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!