Farmers of Perambalur district can take silt from lakes, ponds, free of cost: Collector information!

பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழக அரசின் 2021-2022-ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளவாறு நீர் நிலைகளில் உள்ள வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க நீர்வளத் துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு 1959 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதி 12(2)-இன்படியும், அரசாணை எண்.50 தொழிற் (எம்.எம்.சி.1) துறை, நாள்:27.04.2017-இன்படியும் விரைவாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 268 நீர்நிலைகளுக்கான ஏரி, குளம், குட்டை மற்றும் ஊரணிகளின் பட்டியல்கள் மற்றும் பொதுப்பணித்துறைக்கான 22 ஏரிகளுக்கான பட்டியல்கள் ஆகியவற்றில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பயனளிக்கக் கூடிய அளவில் வண்டல் மண், களிமண், கிராவல் மண் உள்ள மாவட்ட அரசிதழ் எண். நாள்: .03.2023-இன்படி சிறப்பு வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது.

அரசு உத்தரவு மற்றும் கனிம விதிகளின்படி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் சொந்த உபயோகத்திற்காக மட்டும் வண்டல் மண், களிமண், கிராவல் மண் கனிமங்களை நஞ்சை நிலம் எனில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 75 கன மீட்டர் அல்லது 25 டிராக்டர் லோடுகளும், புஞ்சை நிலம் எனில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 90 கன மீட்டர் அல்லது 30 டிராக்டர் லோடுகளும் சொந்த வீட்டு உபயோகத்திற்கு 30 கன மீட்டர் அல்லது 10 டிராக்டர் லோடுகள் மற்றும் மண்பாண்டம் தயாரித்தல் பணிக்கு 60 கன மீட்டர் அல்லது 20 டிராக்டர் லோடுகள் என்ற அளவில் இலவசமாக எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும்.

இவ்வாறு அறிவிக்கை செய்யப்பட்டுள்ள நீர்நிலைகளில் இருந்து வண்டல் மண், களிமண், கிராவல் மண், எடுத்துக் கொள்ள அங்கீகரிக்கப்பட்ட மண் பரிசோதனை கூடம், கல்வி நிறுவன ஆய்வகத்தில் இருந்து பெறப்பட்ட மண் பரிசோதனை அறிக்கையுடன் பெரம்பலூர், மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பித்து அனுமதி பெற்று இலவசமாக மண் எடுத்துக் கொள்ளலாம். என தெரிவித்துள்ளார்.

மேற்படி விதியின் கீழ் வண்டல் மண், களிமண், கிராவல் மண், வழங்கப்படும் அனுமதியானது வீட்டு உபயோக மற்றும் வேளாண் நோக்கத்திற்கு நீங்கலாக இதர தேவைகளுக்கு பயன்படுத்த அனுமதி இல்லை எனவும், மேற்படி விதிகளின் கீழ் மண் எடுக்க அனுமதி பெற, மாவட்ட ஆட்சித் தலைவர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், பெரம்பலூர் மாவட்டம் எனற் முகவரிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!