Free Emergency Telephone Numbers Announced For Corona Infections: Perambalur Collector
பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல்:
கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக தமிழ்நாடு முதமைச்சர் வழங்கிய அறிவுரைகளின் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் முதல்கட்டமாக, பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 552 பள்ளிகளும், 19 கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளும், 5 திரையரங்குகளும், 490 அங்கன்வாடி மையங்களும் மற்றும் 32 மதுபான பார்களும் இன்று முதல் மார்ச் 31 வரை மூடப்பட்டுள்ளது.
அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு அவர்களின் வீட்டிற்கே சென்று அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் உணவுப் பொருட்கள் வழங்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள், பேருந்து நிலையங்களில் நோய் தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், இவ்விடங்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவதை தற்காலிகமாக தவிர்க்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கொரோனா நோய்தொற்றினை தவிர்க்கும் விதமாக ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், கோடைகால பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள், கண்காட்சிகள், கலாச்சார நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் போன்ற நிகழ்வுகளை நடத்த வரும் மார்ச் 31 வரை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நோய்த்தொற்று ஏற்படாமலிக்க பொதுமக்கள் தங்கள் இருப்பிடங்களை சுகாதாரமாக வைத்துக் கொள்வதுடன் கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவவேண்டும் என்றும், நோய்க்கான அறிகுறி கண்டறியப்பட்ட நபரினை உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையினை அணுக வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் இது தொடர்பான சந்தேகங்களுக்கு இலவச அவசர தொலைபேசி எண் 104 மற்றும் 1077 ஆகியவைகளை தொடர்பு கொண்டு தங்கள் சந்தேகங்களுக்குரிய விளக்கம் பெறலாம் என்றும், அரசின் முயற்சிகளுக்கு அனைத்து தரப்பு மக்களும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.