Gram Sabha Meeting in Perambalur District: Collector Notice!

பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

காந்தி பிறந்த நாளான, 02.10.2023 அன்று பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 121 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் நடத்தப்பட உள்ளது. ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கிராம சபைக் கூட்டத்தில் தவறாது கலந்து கொண்டு, கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை கேட்டறிதல் வேண்டும்.

அரசு நலத் திட்டங்களை கூட்டத்தில் வழங்குதல் வேண்டும். அரசு நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை மக்களிடையே கேட்டறிதல் வேண்டும். மேலும், கிராமசபைக் கூட்டத்தில் கீழ்க்காணும் கூட்டப்பொருள்கள் பற்றி விவாதிக்க வேண்டும்.

கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் மற்றும் திட்டப்பணிகள் குறித்து விவாதித்தல். கடந்த ஆண்டிற்கான கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை. ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்),
ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம், 2023-24-ஆம் ஆண்டிற்கான சமூக தணிக்கை செயல் திட்டத்தினை பொதுமக்களுக்கு அறிவித்தல், 2022-23-ஆம் ஆண்டிற்கான கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, மக்கள் திட்டமிடல் இயக்கம், காசநோய் இல்லா கிராம ஊராட்சியாக அறிவிப்பு செய்தல், இதர பொருட்கள் குறித்து விவாதிக்கவும்,

கிராம சபைக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஒன்றியக்குழு தலைவர், துணைத் தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் கிராம சபா உறுப்பினர்கள் (கிராம ஊராட்சி வாக்காளர்கள்) அனைவரும் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்து துறை வாரியான அலுவலர்கள் தவறாது கிராம சபைக் கூட்டங்களில் கலந்து கொள்வதோடு, துறைத் தொடர்பான திட்டங்கள் பொதுமக்கள் நன்கு அறியும் வகையில் கூறிட வேண்டும். கூட்டம் நல்ல முறையில் நடைபெறுவதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் பற்றாளர்களும், வட்டாரம் வாரியாக மாவட்ட நிலை அலுவலர்கள் மண்டல அலுவலர்களாக கிராம சபைக்கூட்டம் நடைபெறுவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர்.

கிராம சபைக் கூட்டத்தில் கிராம வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம சபா உறுப்பினர்களாகிய வாக்காளர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்திற்கும், ஆக்கபூர்வமான ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சியில் இதர பொருட்கள் குறித்து விவாதித்திட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும், என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!