Hanuman Jayanth festival in Namakkal ; 1 lakh devotees participated
நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 1 லட்சத்தி 8 வடைமாலை சார்த்தப்பட்டு சிறப்பு அபிசேஷகம் நடைபெற்றது. சுமார் 1 லட்சம் பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல் கோட்டையில் புரான சிறப்புப் பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் உருவான 18 அடி உயர ஆஞ்சநேயர் நின்ற நிலையில் சாந்த சொரூபியாக பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு நேற்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு வடை மாலை அலங்காரம் செய்யும் பணியில் கோவில் பட்டாச்சாரியார்கள் ஈடபட்டனர். காலை 5 மணிக்கு ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்தி 8 வடைமாலை சார்த்தப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
11 மணிக்கு மஞ்சள், குங்குமம், நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள், திருமஞ்சள், 1008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களால் சிறப்பு அபிசேகம் நடைபெற்றது. பின்னர் தங்க கவச அலங்காரம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது.
ஆஞ்சநேயர் ஜெயந்தியன்று அவரை வழிபடுவதால் குபேர லட்சமி அருள் கிடைத்து செல்வம் பெருகும், நவகிரக தோசம் நீங்கி பல நண்மைகள் கிடைக்கும், கல்வி பலம் பல மடங்கும் அதிகரிக்கும், மன தைரியம் அதிகரிக்கும், மேலும் அனைத்து பயன்களும் பெற்று புகழுடன் வாழ முடியும் என்பது ஐதீகம்.
இதனால், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நாமக்கல் வந்து நாமக்கல் கோட்டையைச் சுற்றியுள்ள அனைத்து ரோடுகளிலும் நீண்ட வரிசையில் நின்று ஸ்ரீஆஞ்சநேயரை தரிசித்தனர்.
கோட்டை ரோட்டில் உழவர் சந்தை வரையும், திருச்செங்கோடு ரோட்டில் சாந்தி தியேட்டர் வரையும் பக்தர்கள் வரிசை நீண்டிருந்ததால் நாமக்கல் கோட்டை பகுதி முழுவதும் போக்குரவத்து தடை செய்யப்பட்டது. அனைத்து வானகங்களும் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டது.
பக்தர்களின் கூட்டத்தால் நாமக்கல் நகரமே வாகன நெரிசலில் சிக்கித் திணறியது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் நடைபெறுவதுபோல் பிரமாண்டமான மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. சுமார் 1.5 டன் எடையுள்ள ரோஜா, மல்லிகை, முல்லை, ஜெர்பாரா போன்ற பல்வேறு வகையான மலர்களை பெங்களூரில் கொண்டு வந்து மலர்களைக் கோர்த்து கோவிலில் அலங்காரம் செய்யப்பட்டது.
சென்னையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் சுமார் ரூ.3.5 லட்சம் மதிப்பீட்டில் இந்த அலங்காரத்தை செய்துள்ளார். விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோவில் இணை ஆணையர் வரதராஜன், உதவி ஆணையர் வெங்கடேஷ், செயல் அலுவலர் ரமேஷ் மற்றும் கட்டளைதாரர்கள் செய்திருந்தனர்.