Illam thedi Kalvi Thittam : Launched by Minister Sivasankar in Perambalur District.
பெரம்பலூர் மாவட்டத்தில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் இல்லம் தேடி கல்வி மைய தொடக்க விழா அரணாரை சமுதாயக்கூடம் மற்றும் குன்னம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கலெக்டர் வெங்கட பிரியா தலைமையில் இன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பெரம்பலூர் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி மையங்களை தொடங்கி வைத்தார். மாவட்ட ஊராட்சி சேர்மன் சி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 2,012 இல்லம் தேடி கல்வி மையங்கள் அமைக்கப்படவுள்ளது. இன்று முதல் முதல்கட்டமாக 1,283 மையங்கள் துவங்கப்பட்டுள்ளது. 2,112 தன்னார்வலர்களை கொண்டு இம்மையங்கள் செயல்பட உள்ளது. இந்த மையங்கள் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளின் கற்றல் இடைவெளியினை குறைக்கும் வகையிலும், வீட்டுச் சூழலில் கல்வி கற்கும் வகையிலும் செயல்பட உள்ளது. இம்மையங்கள் மாலை 5 மணி முதல் 7 மணி வரை செயல்படும். இந்த மையங்களின் மூலம் மாணவ,மாணவிகளின் கற்கும் திறன் அதிகரிக்கும்.
இந்நிகழ்வுகளில் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் முத்தமிழ் செல்வி மதியழகன், ஒன்றிய குழு தலைவர்கள் மீனாஅண்ணாதுரை (பெரம்பலூர்), ராமலிங்கம் (வேப்பந்தட்டை), பிரபாசெல்லப்பிள்ளை (குன்னம்), மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கருணாநிதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஜெகநாதன், திரு.சண்முகம், குன்னம் ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி மதியழகன் மற்றும் அரணாரை துரை.காமராஜ், பெரம்பலூர் 21வது வார்டு கிளைக் கழக செயலாளர் முத்துக்குமார், மற்றும் ஜெயக்குமார் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். முத்துக்குமார் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, பேனா, பென்சில் வழங்கினார்.