In Namakkal district the female ratio is increased; Collector information
நாமக்கல் மாவட்டத்தில் பெண் குழந்தைதள் விகிதாசாரம் அதிகரித்துள்ளது என பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியர் ஆசியா மரியம் தெரிவித்தார்
நாமக்கல் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை வகித்து பேசியதாவது:
அங்கன்வாடி பணியாளார்கள் கிராம சுகாதார செவிலியர்களுடன் இணைந்து கர்ப்பிணி பெண்கள் குறித்த முழுமையான விவரங்களைப் பதிவு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உறவினராக வரும் கர்ப்பிணி தாய்மார்களையும் பிக்மி பதிவு செய்து தொடர் கவனிப்பு வழங்கவேண்டும். சமூக நலத் துறையில் பெண்கள் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஒரு பெண் குழந்தையுடன் அல்லது இரண்டு பெண் குழந்தையுடன் குடும்ப நல அறுவை சிகிச்சை பின்பற்றியவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதி வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 868 என இருந்த பெண் குழந்தைகள் விகிதாசாரம், மாவட்ட நிர்வாகத்தின் தொடர் நடவடிக்கையால் இந்தாண்டு ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 911 பெண் குழந்தைகள் ஆக அதிகரித்து உள்ளது.
மேலும் வரும் ஆண்டில் இந்த விகிதாசாரம் மேலும் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கருவிலுள்ள குழந்தையின் பாலினம் குறித்து தகவல் சொல்லும் ஸ்கேன் மையங்கள் மீது கடும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பேசினார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் ரமேஸ்குமார், உதவி இயக்குநர் நக்கீரன், மாவட்ட தாய் சேய்நல அலுவலர் தேவி, மாவட்ட சமூக நல அலுவலர் அன்பு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் பத்மாவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.