In Perambalur district, cleaning work under the Clean India project: Collector Information
பெரம்பலூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் முழு அளவு சுத்தம் செய்யும் பணிகளை உடனடியாகவும், தொடர்ச்சியாகவும் மேற்கொள்ள பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா உத்தரவிட்டதன் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 4 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 16 மண்டலங்களிலும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்களை வரவழைத்து 16 ஊராட்சிகளில் பெருமளவு துப்புரவு பணி நடைபெற்றது.
பெரம்பலூர் வட்டம் எளம்பலூர் கிராமத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் எளம்பலூர் மண்டலத்திற்குட்பட்ட செங்குணம், கவுல்பாளையம், வடக்குமாதவி, கோனேரிபாளையம், எசனை, கீழக்கரை, ஆலம்பாடி ஆகிய ஊராட்சிகளில் தூய்மை பணியாளர்களை கொண்டு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பொது இடங்கள் மற்றும் நீர் நிலைகள் பெருமளவு துப்பரவு பணி செய்யப்பட்டன. அதனடிப்படையில் தேசிய நெடுஞ்சாலை, இந்திரா நகர், எம்.ஜி. ஆர் நகர், சமத்துவபுரம் என பல இடங்களில் 52 தூய்மை பணியாளர்களை கொண்டு குப்பைகள் சேகரம் செய்யப்பட்டது. அதனை, மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து எடுக்கப்பட்டு மக்கும் குப்பைகளை உரமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாலை நேர மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம், திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாத நிலை, ஆகியவற்றை தொடர்ந்து தக்க வைத்தல் குறித்து சுகாதார ஊக்குநர்களை கொண்டு வீடுவீடாக சென்று நேரடி தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கு.சித்ராதேவி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) செந்தில், வட்டார ஒருங்கிணைப்பாளர் அண்ணாமலை, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.