In Perambalur Revenue Officers Association demands the evening dharna
பெரம்பலூரில் வருவாய்த் துறை அலுவலர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய மாலை நேர தர்ணா போராட்டம் நடத்தினர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்துறை அலுவலக சங்கத்தினர் மாலை நேர தர்ணா போராட்டம் மாவட்டத் தலைவர் மகாராஜ் தலைமையில் நடைபெற்றது.
தர்ணா போராட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் துணை ஆட்சியர் பதவி உயர்வு பட்டியலை வெளியிட்டு பணியமர்வு ஆணைகளை வெளியிட வேண்டும்,
சிறப்பு நிலை செயலாக்க திட்டத்தில் கலைக்கப்பட்ட அனைத்து நிலை பணியிடங்களையும் மீண்டும் உருவாக்கி செயல்படுத்த வேண்டும், குடிமைப் பொருள்கள் பிரிவில் பணிநீக்கம் செய்யப்பட்ட கணினி இயக்குபவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், அப்பணிக்கு போதிய நிதி ஒதுக்கீடு மற்றும் கால அவகாசம் வழங்க வேண்டியும்,
வறட்சி நிவாரணக் கணக்கெடுப்பிற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கிடவும், வருவாய்த் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரியும், புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டியும்,
தொகுப்பூதிய மற்றும் ஒப்பந்த ஊதிய முறைகளை ரத்து செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மாலை நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட செயலாளர் பாரதிவளவன் வரவேற்றார். சட்ட ஆலோசகர் ந.சீனிவாசன் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பெரம்பலூர் மாவட்டத் தலைவர் ஆளவந்தார் போரட்ட துவக்க உரை நிகழ்த்தினார். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர் சு.பார்த்திபன், சிறப்புரை நிகழ்த்தினார்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க பெரம்பலூர் மாவட்டத் துணைத் தலைவர் தயாளன் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட பொருளாளர் தமிழரசன் நன்றி கூறினார்.