India is not safe because of Modi for the last 10 years like a flower garland found in a monkey’s hand! Araja’s speech in the election campaign!

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில், போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து, திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வி.களத்தூர் கிராமத்தில், வேனில் நின்றபடி பிரச்சாரம் மேற்கொண்டு, பொதுமக்களிடம் வாக்குகள் கேட்டு பேசினார்.

அப்போது ஆ.ராஜா பேசியதாவது:

கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த போது, முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியோ, 56 இன்ச் மோடியோ வெளியே வராத நிலையில், அதனைத்தொடர்ந்து முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் கொரோனா பெருந்தொற்றையும், சென்னை பெரும் வெள்ளத்தையும், ஊதாரித்தனமாக எடப்பாடி செலவு செய்த 5 லட்சம் கோடி ரூபாய் கடனையும் என மூன்று சவால்களை எதிர்கொண்டார்.

மேலும் பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியின் படி 4 ஆயிரம் வழங்கினார். அதேபோல், மகளிர்க்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை டெல்லியில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் உங்க ஸ்டாலின் டுபாக்கூர் உடுகிறாரா? என விமர்சனம் செய்து பேசினார்கள்.

ஆனால் ஆட்சிக்கு வந்த அடுத்த ஆண்டு, மகளிர் உரிமைத்துறை திட்டத்தை செயல்படுத்தியது மட்டுமல்லாமல், தொடர்ந்து மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்துக் கொண்டிருக்கிறார். மேலும் காலை உணவு திட்டம் குறித்து பற்றி பேசிய ஆ. ராசா, ஒரு கப்பு சாதத்தையும், கொஞ்சம் சாம்பாரையும் கொடுத்து மதிய உணவு திட்டத்தை காமராஜ் செயல்படுத்தியதாகவும், அதனைத் தொடர்ந்து எம்ஜிஆர், கொஞ்சோண்டு காயையும், கொஞ்சம் பருப்பையும் போட்டு சத்துணவு என்று ஆக்கினார் அது உண்மையான சத்துணவு என்று சொல்ல முடியாது.

ஆனால் வாரத்தின் ஏழு நாட்களிலும் முட்டை கொடுத்து உண்மையான சத்துணவாக மாற்றியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்றார். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் காலை சிற்றுண்டியையும் வழங்கி வருகிறார்.

பிரச்சாரக் கூட்டத்தின் மத்தியில் நின்று கொண்டிருந்த பெண்களைப் பார்த்து.. அரசு பேருந்துகளில் செல்கிறீர்களே! உங்களிடம் டிக்கெட் கேட்கிறார்களா? என கேள்வி எழுப்பிய ஆ.ராசா பொழுது போகவில்லை என்றாலும், கணவர் அழைத்து வரவில்லை என்றாலும் பேருந்துகளில் காலை, மாலை என சென்று வரலாம்.

இப்படி பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிற தமிழக முதல்வர் தான் உங்களிடத்திலே பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக அருண்நேருவை நிறுத்தி இருக்கிறார்.

உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன் என காட்சி ஊடகங்களில் வரும் விளம்பரங்களை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள் எதற்காக அழைக்கிறார் என்றால் இந்தியா பாதுகாப்பாக இல்லை என்பதற்காகத் தான், காப்பாற்ற அழைக்கிறார்.

குரங்கு கையில் கிடைத்த பூ மாலையை போல, கடந்த 10 ஆண்டுகளாக மோடியால் இந்தியா பாதுகாப்பாக இல்லை!

வி.களத்தூரில் இந்துக்கள் முஸ்லிம்கள் என அனைவரும் இருக்கிறோம். நான் வந்து பிரிவினை இருக்கவே கூடாது என சொல்பவன் அல்ல அந்தப் பிரிவினை மோதலுக்கு வழி வகுக்கக் கூடாது. அம்பேத்கர் வழிவகுத்த அரசியல் சட்டத்தால் தான் இதுவரை நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்.

இந்த தேர்தல் அருண் நேருவுக்குகானது என்று நினைக்கிறீர்களா? அருண் நேரு வெற்றி பெற விட்டால் சோற்றுக்கு வழியில்லை என்று நினைக்கிறீர்களா? ராஜாவுக்கான தேர்தல் அல்ல! பெரம்பலூருக்கானதோ, தமிழ்நாட்டிற்கான தேர்தலோ அல்ல! இந்த தேர்தல் இந்தியாவுக்கானது.

அரசியல் சட்டம் இருக்க வேண்டுமா? வேணாமா? அரசியல் சட்டம் இல்லை என்றால் இந்தியா உடைந்து விடும். ஆனால் மோடி சொல்கிறார் நான் மீண்டும் வந்தால் அரசியல் சட்டம் இருக்காது. ஒரே மதம், ஒரே மொழி அதுவும் இந்தி தான் இருக்கும், ஒரே உணவு, ஒரே உடை, ஒரே தேர்தல் என்று சொல்கிறார்.

அந்த கறி சாப்பிடாக்கூடாது!இந்த கறி சாப்பிடக்கூடாது என்று சொல்ல மோடி யார்? இப்படி அயோக்கியத்தனமான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. குடும்ப ஆட்சி நடக்கிறது என்று மோடி கூறுகிறார். ஊழலுடைய மொத்த அடைக்கலமே மோடி தான்!

முதல்வர் கூறுவது போல், நேற்று வரை அயோக்கியனாக இருந்த ஊழல்வாதிகள் மோடி வாஷிங் மிஷின் உள்ளே சென்று வந்தால் கிளீன் ஆகி விடுவார்களா? நீ பிரதமர் வேலை பார்ப்பதற்கு வேறு ஏதாவது வேலை பார்க்கலாம் என மோடியை ஒருமையில் விமர்ச்சித்து பேசினார்.

இந்த அயோக்கியத்தனத்தை செய்து கொண்டிருக்கும் மோடியை எதிர்ப்பதற்கு இந்தியாவில் யாரும் இல்லை! மோடி நீ செய்வது தவறு என எதிர்த்த
தலை நகரத்தின் முதல்வராக இருக்கும் கஜுர்வாலையும், ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனையும் சிறையில் அடைத்து விட்டார்கள். மம்தா பானர்ஜியும் ஏற்கனவே அமைதி ஆகி விட்டார்கள்!

ஆனால் இந்தியாவிலேயே மோடியை எதிர்த்து நின்று, உன்னுடைய மதவாதத்தையும், ஊழலையும் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் இந்தியாவை பாதுகாக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது என குரல் கொடுத்தவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என்றார்.

எனவே அந்த குரலை உயர்த்துப் பிடித்து இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்றால், அருண் நேருவிற்கு உதயசூரியன் சின்னத்திலே வாக்களித்து அவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இந்த பிரச்சாரப் பயணக் கூட்டத்தில், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா உள்ளிட்ட திமுக உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதே போல, ஆ.ராஜா அரும்பாவூர், லாடபுரம், செட்டிக்குளம், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் பிரச்சாரம் செய்து திமுக வேட்பாளர் அருண்நேருவிற்கு வாக்குகள் சேகரித்தார். அமைச்ர் கே.என். நேரு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அரும்பாவூர் உள்ளிட்ட பல ஊர்களில் கலந்து கொண்டனர். அருண்நேருவின் அம்மா பிறந்த ஊர் அரும்பாவூர் என்பது குறிப்பிடத்தக்கது,


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!
Enable Notifications OK No thanks