Indian Labor Party leader arrested in Perambalur in money laundering case!
பெரம்பலூர் அருகே பெண்ணிடம் ரூ. 9 லட்சம் பணம், 8 பவுன் நகைகளை வாங்கிக்கொண்டு திரும்ப கொடுக்காமல், மோசடியில் ஈடுபட்டதோடு, கொலை மிரட்டல் விடுத்த இந்திய தொழிலாளர் கட்சி மாநிலத் தலைவர் பி.ஆர். ஈஸ்ரவனை போலீஸார் கைது செய்து இன்று சிறையில் அடைத்தனர்.
பெரம்பலூர் அருகேயுள்ள கோனேரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரத்தினம் மகன் ஈஸ்வரன் (42). இவர், இந்திய தொழிலாளர் கட்சி மாநிலத் தலைவராக உள்ளார். இவருக்கு மனைவி சுகந்தி, மகன் கோகுல் ஆகியோர் உள்ளனர். பெரம்பலூர், வடக்குமாதவி சாலையைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி சித்ராவிடம் (50) கடனாக ஈஸ்வரன் வங்கிக் கணக்கு மூலம் ரூ. 8 லட்சம் ரொக்கமும், நேரிடையாக 8 பவுன் நகைகளையும் பெற்றதாகவும், மேலும், ஈஸ்வரனின் மகன் கோகுல் வழியாக 1 லட்சத்தை பெற்றுள்ளார்.
சித்ராவின், பணம் மற்றும் நகைகளை வாங்கி 3 ஆண்டுகளாகியும், திருப்பி கொடுக்கவில்லை என்றும், பலமுறை திரும்ப கேட்டும் ஈஸ்வரன் வழங்காததால், அண்மையில் பணத்தையும், நகையையும் திருப்பித் தருமாறு கேட்ட சித்ராவை, தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து சித்ரா அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து ஈஸ்வரனை இன்று கைது செய்து, பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.