Karthikai Deepa Festival; Mahadeepam mounted on Brahmarishi hill near Perambalur!
பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் கார்த்திகை மகாதீப திருவிழா வெகுவிமர்சையாக நேற்று நடந்தது.
எளம்பலூர் மகா சித்தர்கள் டிரஸ்ட் சார்பில் உலக மக்கள் நலன் கருதியும், இயற்க்கை சீற்றங்களில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டியும், ஒவ்வொரு ஆண்டும் பிரம்மரிஷி மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. மகாதீபத்திருவிழா நேற்று (19ம்தேதி) மாலை 6 மணியளவில் 2 ஆயிரம் மீட்டர் கொண்ட திரி, ஆயிரத்து 8 லிட்டர் நெய்யுடன், நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய் மற்றும் 108 கிலோ கற்பூரம் கொண்டு, 5 அடி உயர செப்புக் கொப்பரையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இதை தொடர்ந்து விழாவில் சாதுக்களுக்கு காசுதானமும், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கு மகா சித்தர்கள் டிரஸ்ட் அறக்கட்டளை இணை நிறுவனர் ரோகிணி மாதாஜி தலைமை வகித்தார். தவயோகி சுந்தரமகாலிங்கம் சுவாமிகள், தவயோகி தவசிநாதன் சுவாமிகள், மாதாஜி ராதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிலை திருட்டு தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி ராஜாராம், ஏடிஎஸ்பி ஆரோக்கிய பிரகாசம், அதிபன் போஸ் , கிஷோர் குமார், இலங்கை விக்ரமசிங்கே, திட்டக்குடி ராஜன், இந்துசமய அறநிலையத்துறை ஓய்வு இணை ஆணையர் சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.