Leaders condemn those who damaged the statue of Periyar: demand for punishment

Model Photo Periyar
காஞ்சிபுரம் அருகே பெரியார் சிலையை சேதப்படுத்தியோரை தண்டிக்க வேண்டும்! என பாமக ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை:
காஞ்சிபுரம் மாவட்ட சாலவாக்கத்தை அடுத்த கலிப்பட்டு கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் திருவுருவச் சிலையை சில விஷமிகள் சேதப்படுத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்குடன் செய்யப்பட்டுள்ள இந்த வெறுப்புச் செயல் கண்டிக்கத்தக்கது.
அண்மைக்காலமாகவே தந்தைப் பெரியார், திருவள்ளுவர் உள்ளிட்டோரின் சிலைகளை சேதப்படுத்தும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இது ஒரு சாராரின் வக்கிர உணர்வையே வெளிப்படுத்துகிறது. தந்தை பெரியாரின் கொள்கைகளில் மாற்றுக்கருத்து இருந்தால், அதை கொள்கைகள் மூலமாகத் தான் எதிர்கொள்ள வேண்டும். மாறாக, பெரியாரின் சிலைகளை சேதப்படுத்துவது, அவமதிப்பது போன்ற செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இத்தகைய செயல்களால் தந்தை பெரியாரை எவராலும் சிறுமைப்படுத்த முடியாது. மாறாக, இதை செய்தவர்கள் தான் சிறுமைப்பட்டு போவார்கள்.
கலிப்பட்டு கிராமத்தில் பெரியாரின் சிலையை சேதப்படுத்தியவர்களை காவல்துறை கைது செய்து தக்க தண்டனை பெற்றுத்தர வேண்டும். இனி இத்தகைய செயல்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.
இதே போன்று, டிடிவி தினகரன் விடுத்துள்ள அறிக்ககையில். கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, தண்டிக்கவும உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளார்.