Minority Rights Day in Perambalur
பெரம்பலூரில், மதவழி சிறுபான்மையினர்களான இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள், புத்தமதத்தினர், பார்சிக்கள் மற்றும் சீக்கியர்கள் ஆகியோர்களின் உரிமைகளை பாதுகாத்திடும் வகையிலும், சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா பெரம்பலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பாண்டியன் தலைமையில் இன்று பெரம்பலூர் ஜே.கே மஹாலில் நடைபெற்றது.
இவ்விழாவில் சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்களான மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் ஆதரவற்ற பெண்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள், கிருத்துவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள அரசு நிதியுதவி வழங்குதல்,
உலாமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள், சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை திட்டங்கள் மற்றும் பேகம் ஹஜ்ரத் மகால் தேசிய கல்வி உதவித்தொகை திட்டங்கள், பல்நோக்கு வளர்ச்சி திட்டம் மூலம் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துதல்,
சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மேலும் (டாம்கோ) தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார கழகத்தின் மூலம் வழங்கப்படும் பல்வேறு கடன் திட்டங்கள் உள்ளிட்ட திட்டங்களை பற்றி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் சார்பில் எடுத்துரைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்க கவுரவ செயலாளர் ஏ.ஹமிதாகலாம், தமிழ்நாடு சிறுபான்மையின மக்கள் நலக்குழு மாவட்ட செயலாளர் எஸ்.அகஸ்டின், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக செயலாளர் தாஹீர், முஸ்லீம் ஜமாத்தார்கள், முஸ்லீம் சங்க உறுப்பினர்கள் மற்றும் முஸ்லீம், கிருத்துவ சமய மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.