Namakkal district employment office launches special section for the disabled;
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக அரசால் மாற்றுத்திறனாளிகளின் சிரமத்தை தவிர்க்கும் வகையில் 18 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் மாற்றுதிறனாளிகள் பதிவு செய்துக் கொள்ளும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பு பிரிவு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்த்தில் கடந்த டிச.1ம் தேதி முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது.
இதன் மூலம் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கண்பார்வை இழந்தோர், காது கேளாதோர், உறுப்பு நலன் குறைந்தவர்கள் மற்றும் இதர மாற்றுத்திறனாளிகள் அனைவரும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முன்னுரிமை பிரிவில் பதிவு செய்து கொள்ளலாம். இச்சிறப்பு பிரிவு மூலம் அவர்களுக்கு கல்வி உதவித் தொகை, அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு பரிந்துரை, தொழில் நெறி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை, சுயதொழில் வழங்குவதற்கு ஆலோசனை, திறன் பயிற்சி தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.
மேலும் ஏற்கனவே சென்னை மாற்றுத்திறனாளிகள் சிறப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து மாற்றுத்திறனாளிகள், தங்கள் பதிவட்டை, அனைத்து கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் முன்னுரிமைச் சான்று ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து தங்கள் பதிவினை சரிசெய்து கொள்ளுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.