New Literacy Program awareness rally near Perambalur!
பெரம்பலூர் வட்டார வள மையம் சார்பில் அருமடல் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் குறித்து விழிப்புணர்வு பேரணி மற்றும் திட்ட விளக்க துண்டுபிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் தேவகி தலைமையில் நடந்தது. தலைமையாசிரியர் சாந்தி முன்னிலை வகித்தார்.
வட்டார கல்வி அலுவலர் ஜோதிலட்சுமி பேசியதாவது:
பள்ளிக்கல்வித்துறை பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் மூலம் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் துவங்கப்பட்டுள்ளது இதன் முக்கிய நோக்கம் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு கல்வியை வழங்குதலாகும். இந்த குறிக்கோளை அடைய கல்வி அறிவு பெறாதவர்கள் குடியிருப்பு வளாகம், பணிபுரியும் தொழிற்சாலை வளாகம் மற்றும் 100 நாள் வேலை திட்டம் நடைபெறும் இடத்திலும் எழுத்தறிவு மற்றும் எண் அறிவு கல்வியை வழங்குதல், கதை மற்றும் பாடல்கள் மூலம் எழுத்தறிவு வழங்குதல் போன்றவற்றை முன்னிறுத்தி கற்போர் அனைவரும் தங்கள் பெயர்களை எழுதுவதற்கு எழுத்து பயிற்சி வழங்குதல், கல்லாமையை இல்லாமையாக்குதல், அஞ்சலகம் மற்றும் வங்கிகளில் பணப் பரிமாற்றம் செய்யும் போது கேட்கப்படும் படிவங்களை தாங்களே பூர்த்தி செய்யும் அளவிற்கு பயிற்சி எடுத்தல் போன்ற அரசின் நலத்திட்டங்களை முழுமையாக மக்கள் அறிந்திட வலியுறுத்தி பேரணி நடத்தப்படுகிறது என தெரிவித்தார். தொடர்ந்து விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இப்பேரணி அருமடல் கிராமத்தின் வடக்கு தெரு கிழக்கு தெரு மற்றும் எம்ஜிஆர் நகர் போன்ற முக்கிய வீதிகள் வழியே சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் விநியோகித்தனர். இதில் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் குணசேகரன், சுப்ரமணியன், ரமேஷ், கலைவாணன், ரமேசு, ஜனனி உட்ட பலர் கலந்துகொண்டனர்.