Perambalur BJP leader arrested in film director’s murder case!
பெரம்பலூர் பாலக்கரை அருகே உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டல் பாரில் கடந்த ஜுன் 5ம் தேதி, பிறந்த நாள் மற்றும் திருமண நாளை கொண்டாட பிரபல ரவுடியும், திரைப்பட டைரக்டருமான, செல்வராஜ், (எ) அப்துல்ரகுமான், நண்பர்கள் உறவினர்களுடன் மது அருந்தி கொண்டிருந்த போது, மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியது.
இது குறித்து, பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தியதில், திருச்சி நீதிமன்றத்தில், பெரம்பலூரை சேர்ந்த சரவணன் (23), சரணடைந்தார்.
இந்நிலையில் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், பெரம்பலூரில், ரவுடி செல்வராஜின் வளர்ச்சியால், அம்மாபாளையத்தை சேர்ந்த அழகிரி தரப்பிற்கு தொழில் போட்டி ஏற்பட்டதோடு, பஞ்சாயத்து செய்வதில், வருமானம் பாதிக்கப்படுவதோடு, செல்லாக்கு குறைவதாக கருதிய சிறையில் இருக்கும் அழகிரி தனது மனைவி சங்கீதா மூலம் திட்டம் தீட்டி கொலை செய்தது தெரியவந்தது.
அதற்கு உடந்தையாக இருந்த, திருச்சி ஹேப்பில் வசிக்கும் அழகிரியின் தங்கை ரமணி (34), ரமணியின் கணவர் பிரேம் ஆனந்த (45), பெரம்பலூர் மேட்டுத் தெருவை சேர்ந்த, மனோகரன் மகன் அபினாஷ் (22), துறையூர் வடமலை சந்தை சேர்ந்த சேகர் மகன் நவீன் (20), பெரம்பலூர் அருகே உள்ள செஞ்சேரியை சேர்ந்த நவீன் (19), மற்றும் ஆலம்பாடியை சேர்ந்த சிறுவன் ஒருவனையும் கைது செய்த போலீசார், வழக்குப் பதிவு செய்து, 6 பேரையும், பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களை நீதிபதி அபினாஷ், துறையூர் நவீன், செஞ்சேரி நவீன், பிரேம் ஆனந்த் ஆகிய நால்வரும் திருச்சி மத்திய சிறையிலும், ரமணி என்பவர் திருச்சி பெண்கள் சிறையிலும், சிறுவனை இளஞ்சிறார் திருச்சி இளஞ்சிறார் கூர்நோக்கு இல்லத்திலும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவுப்படி, அடைத்தனர். மேலும், அழகிரி மனைவி சங்கீதாவையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த கொலை வழக்கில் 19 பேர் தொடர்புடைய நிலையில், இன்று, பெரம்பலூர் மாவட்ட பாஜக துணைத் தலைவர் ஜெயபாலாஜி, 4 மாதங்களுக்கு முன்பு சிறையில் சென்று அழகிரியை பார்த்து வந்தது மற்றும் போன் கால்களை ஆய்வு செய்து, அந்த தொடர்பில் இருந்ததோடு, டைரக்டரை கொல்வதற்கு சதித்திட்டம் தீட்டியதை உறுதிப்படுத்திய போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.