Perambalur collector plea to review the Scheduled castes and Tribes Welfare student accommodation Hostel
பெரம்பலூர் மாவட்டத்தில் 34 ஆதிதிராவிட நல மாணவ மாணவியர் விடுதிகளும், பழங்குடியினர் மாணவியர் விடுதி ஒன்றும், நான்கு கல்லூரி மாணவ மாணவியர் விடுதிகளும், பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி ஒன்றும் செயல்பட்டு வருகின்றது.
இவ்விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் அனைத்து மாணவ – மாணவியர்களுக்கும் உணவு, உறைவிடமும் மற்றும் நான்கு இணை சீருடைகள், இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும், 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்பட்டு வருகிறது.
நேற்று அம்மாபாளையத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாணவ விடுதியை மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா ஆய்வு மேற்கொண்டார்.
விடுதியில் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்ட உணவின் தரம் குறித்தும், மாணவ மாணவிகளின் வருகை பதிவேடு குறித்தும், விரிவாக மாவட்ட ஆட்சியர் ஆய்வு நடத்தினார்.
வருகை பதிவேட்டில் உள்ள மாணவர்களின் வருகைக்கு ஏற்ப உணவுகள் தயார் செய்யப்பட்டுள்ளனவா என்று ஆய்வு செய்தார். மேலும், சமையல் செய்யும் அறை மற்றும் உணவருந்தும் கூடம் சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா, மாணவர்களுக்கு வழங்கப்படும் நீரில் ஏதேனும் டெங்கு கொசுக்கள் உற்பத்தி ஆகின்றனவா என்றும் பார்வையிட்டார்.
டெங்கு காய்ச்சல் விடுதியில் உள்ள மாணவ மாணவிகளுக்கு பரவாமல் தடுக்கும் வகையில் விடுதி வளாகத்தினை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்று விடுதிக் காப்பாளருக்கு அறிவுறுத்தினார்.
மேலும், விடுதியில் தங்கி பயிலும், மாணவ மாணவிகளின் கல்வி தரம் குறித்து ஆய்வு செய்து, மாணவர்கள் படிப்பதற்கான உகந்த சூழல் விடுதியில் உள்ளதா என்று மாணவர்களிடம் கேட்டறிந்தார்.
விடுதியில் தங்கி பயிலும் மாணவர்கள் அனைவரும் தங்கள் படிப்பில் முழு கவனமும் செலுத்தி தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ள மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்
இவ்வாய்வின்போது மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இருதயமேரி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.