Perambalur Collector Request to public to celebrate Immaculate Bogi!

Model Photo

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

அறுவடை திருநாளை தமிழர்கள் பொங்கல் திருநாளாக தொன்றுதொட்டு கொண்டாடி வருகின்றனர். தைப் பொங்கலுக்கு முதல் நாளை போகிப் பண்டிகையாக ”பழையன கழிதலும், புதியன புகுதலுமாக கொண்டாடி வருவது வழக்கம்”. இந்நாளில் தமிழர்கள் திருமகளை வரவேற்கும் முகமாக தங்கள் வீட்டில் உள்ள பழைய வேண்டாத பொருட்களையும், தங்கள் வசமுள்ள செயற்கை பொருட்களான டயர்கள், பிளாஸ்டிக் மற்றும் இதர தேவையற்றவைகளையும் எரிக்கும் பழக்கத்தை கையாண்டு வருகின்றனர்.

இத்தகைய செயற்கைப் பொருட்களை எரிப்பதால் ஏற்படும் நச்சுப்புகைகளான கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடுகள், கந்தக டை ஆக்ஸைடு, டையாக்சின், ப்யூரான் மற்றும் நச்சுத்துகள்கள்ஆகியவற்றால் சுற்றுப்புற காற்றின் தன்மை மாசுபடுகிறது. மேலும் கண், மூக்கு, தொண்டை, தோல் ஆகியவைகளில் எரிச்சலும் ஏற்படுகிறது. பார்க்கும் திறன் குறைபடுகிறது.

இதுபோன்று காற்றை மாசுபடுத்தும் செயல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986, பிரிவு (15)-ன் படி இது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே போகிப் பண்டிகையன்று டயர்கள், பிளாஸ்டிக். ரப்பர் மற்றும் இதர கழிவுப்பொருட்களை கொளுத்தாமல் குப்பைகளை முறைப்படி அகற்றி போகித் திருநாளை மாசு இல்லாமல் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதுடன் சுற்றுச்சூழலையும், மக்களின் உடல்நலத்தையும் பாதுகாக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!