Perambalur Collector Venkata Priya calls on farmers to set up seed farms!
பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தரமான விதையே நிறைவான மகசூலுக்கு ஆதாரம். இதை உறுதிபடுத்த வேளாண்மை துறை, தமிழ்நாடு விதை மேம்பாட்டு முகமை மூலம் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் நெல், சிறுதானியம், பயறு, எண்ணெய்வித்து மற்றும் பருத்தி பயிர்கள் சாகுபடிக்குத் தேவைப்படும் மொத்த விதை அளவில் 25 சதவீதம். அதாவது 30,000 மெ.டன் வேளாண்மைத் துறையால் விநியோகம் செய்யப்படுகிறது.
மாநில அரசின் விதைப்பண்ணைகள் மற்றும் விவசாய பெருமக்கள் வயல்களில் விதை பண்ணை அமைக்கப்பட்டு விதைச் சான்றளிப்பு துறையின் மேற்பார்வையில் தரமான விதைகளை பல விவசாயிகளுக்கு விநியோகம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமை மூலம் கொள்முதல் செய்கிறார்கள்.
நெல், சிறுதானியம், பயறு, எண்ணெய்வித்து மற்றும் பருத்தி பயிர்கள் தானியமாக விற்பனை செய்வதால் ஈட்டும் இலாபத்தை விட தரமான விதை உற்பத்தி செய்து விற்பதால் விவசாயிகள் இரு மடங்கு இலாபம் ஈட்டலாம். மேலும், மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான விதை விலைக்கொள்கை நிர்ணயித்து அனைத்து பயிர்களிலும் விதை கொள்முதல் விலை கூடுதலாக விவசாய பெருமக்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது.
விதைப்பண்ணை அமைத்து விவசாயிகள் பயன் பெற பதிவு செய்யும் முறைகள்: விவசாயிகள் வேளாண்மைத்துறை உழவன் செயலியை பயன்படுத்தி விவசாயியின் பெயர், கிராமம், வட்டாரம், விதைப்பண்ணை அமைக்க விரும்பும் பயிர், இரகம், பரப்பு, சர்வே எண் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து முன்பதிவு செய்து பயன்பெறலாம். எனவே வரும் ராபி பருவத்தில், ஆர்வமுள்ள விவசாயிகள், விதைச் சான்று அலுவலர்கள் அளிக்கும் வழிமுறைகளை பின்பற்றி விதைப்பண்ணை அமைத்து தரமான விதைகளை வழங்க முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.