Perambalur District Level Climate Change Committee Meeting was held under the Chairmanship of the Collector!

பெரம்பலூர் மாவட்ட அளவிலான காலநிலை மாற்றக் குழுக் கூட்டம் கலெக்டர் க.கற்பகம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

அப்போது அவர் தெரிவித்ததாவது: காலை நிலை மாற்றத்தால் தற்போது வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின் போது போதிய அளவிலான குடிநீர் எடுத்துச்செல்ல வேண்டும்.

ஓ.ஆர்.எஸ். கரைசல், எலுமிச்சை சாறு, இளநீர் ஆகியவற்றை குடிக்கலாம். வெயில் நேரத்தில் அதிகம் வெளியில் செல்லாமல் முடிந்தவரை வீட்டில் இருக்க வேண்டும்.குறிப்பாக காலை 11 மணி முதல் மதியம் 3.30 மணி வரை தேவை இல்லாமல் வெளியில் செல்ல வேண்டாம். நிறுத்தப்பட்ட கார்களில் குழந்தைகளை விட்டுச்செல்ல வேண்டாம். மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது.

நமது பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும். நாம் அடுத்த தலைமுறையினருக்கு இது போன்ற நன்மைகளை செய்யுங்கள். இதுகுறித்து பொதுமக்களிடத்தில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பெரம்பலூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் துறையினர் இணைந்து பொதுமக்கள் அதிகம் கூடும் 20 இடங்களில் ஓ.ஆர்.எஸ்.கரைசல் வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளான புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், முத்துநகர், சாமியப்பா நகர் ஆகிய இடங்களிலும். பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அம்மாபாளையம் பேருந்து நிறுத்தம், சிறுவாச்சூர் பேருந்து நிறுத்தம், ஆலம்பாடி, எளம்பலூர் ஆகிய இடங்களிலும்,

வேப்பந்தட்டை ஒன்றியத்தில் வேப்பந்தட்டை, அரும்பாவூர், பூலாம்பாடி, வி.களத்தூர் பேருந்து நிறுத்தங்கள், ஆலத்தூர் ஒன்றியத்தில் டி.களத்தூர்,செட்டிகுளம் பேருந்து நிறுத்தம், கொளக்காநத்தம், மேலமாத்தூர் ஆகிய இடங்களிலும், வேப்பூர் ஒன்றியத்தில் குன்னம், வேப்பூர், லப்பைகுடிகாடு, அகரம்சீகூர் பேருந்து நிறுத்தங்கள் என மொத்தம் 20 இடங்களில் பொதுமக்களுக்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என தெரிவித்தார்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலர்களுக்கு ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த அரங்கை பார்வையிட்ட கலெக்டர், அனைவருக்கும் ஓர்.ஆர்.எஸ் கரைசலின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி வழங்கிட அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் வருவாய் , ஊரக மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!