Perambalur near broke the check Dam Somebody, VAO complaint, the police registered a case against
பெரம்பலூர் அருகே நீர்வரத்து வாய்க்காலில் கட்டப்பட்டுள்ள மழை நீர் தடுப்பணையை உடைத்தவர்கள் மீது கிராம நிர்வாக அலுவலர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் கிருஷ்ணாபுரத்தில் இருந்து அன்னமங்கலம் செல்லும் சாலை அருகில் கல்லாற்றுக்கு வரக்கூடிய நீர் வரத்து வாய்க்காலில் தடுப்பணை கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக கட்டப்பட்டது.
இந்த அணையில் மழை காலங்களில் தேங்கும் தண்ணீரை கொண்டு அந்த பகுதியில் உள்ள பல விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது. இந்நிலையில் நேற்று இந்த தடுப்பணையை அதே பகுதியை சேர்ந்த ராமசாமி (வயது63) அவரது மகன் செந்தில்குமார் (வயது35) ஆகியோர் தங்கள் வயலுக்கு செல்வதற்கு இந்த தடுப்பணை இடையூறாக இருப்பதாக கூறி தடுப்பணையை உடைத்து சேதப்படுத்தினார்கள்.
இது குறித்து அந்த பகுதி விவசாயிகள் வெங்கலம் கிழக்கு பகுதி கிராம நிர்வாக அதிகாரி வினோத் குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து கிராம நிர்வாக அதிகாரி வினோத்குமார் தடுப்ணையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரும்பாவூர் போலீசில் புகார் செய்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.