Perambalur: Physiotherapist arrested for taking bribe of 2000 rupees from disabled person!
பெரம்பலூரில் ஸ்கூட்டர் பெறும் பயனாளியாக தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளியிடம் 2000 ரூபாய் லஞ்சம் வாங்கிய மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலக உடல் நீக்கு வல்லுநரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும் களவுமாக இன்று கைது செய்தனர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பில்லாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி மாற்றுத்திறனாளியான இவர் சமீபத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் ஸ்கூட்டர் பெறும் பயனாளியாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் பணிபுரியும் உடல் நீக்கு வல்லுனரான பிரபு என்பவர் மாற்றுத்திறனாளி ரவியிடம் ஸ்கூட்டரை வழங்கிட 2000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
ஆனால் லஞ்சமாக பணம் தர இயலாத ரவி தன்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்ததால், ஸ்கூட்டரின் ஆர் சி.,யை வைத்துக் கொண்ட பிரபு பணத்தை கொடுத்து விட்டு ஆர்சியை வாங்கி செல்லுமாறு தெரிவித்துள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ரவி, விபரத்தை பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்து, அவர்களது அறிவுறுத்தலின் பேரில் பிரபுவிடம் 2 ஆயிரம் ரூபாயை கொடுக்கையில் பிரபுவை, டிஎஸ்பி.,ஹேமச்சித்ரா மற்றும் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையிலான 8 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாற்றுத்திறனாளிக்கு வழங்கப்பட்ட ஸ்கூட்டரின் ஆர்சி.,யை வைத்துக்கொண்டு 2000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தான் ஆர்சி.,யை தருவேன் என கூறிய மாவட்ட உடல் நீக்க வல்லுனர் ஒருவர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது.