perambalur-thiftபெரம்பலூர் அருகே உள்ள தீரன் நகரில் பூட்டியிருந்த இரு வீடுகளின் பூட்டை உடைத்து 9 பவுன் தங்க நகை ரூ.95 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையிட்ட சம்பவம் குடியிருப்பு வாசிகளுக்கு பயத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தீரன் நகரை சேர்ந்த ராமசாமி மகன் பெருமாள்(52), (அரசுப் பேருந்து நடத்துனர்), இவர் தனது மனைவி சக்தி(44), மகன் கிஷோர்குமார்(21), மகள் பிரியதர்ஷனி(18) ஆகியோருடன் நேற்று வீட்டை பூட்டி விட்டு சேலம் மாவட்டம் செக்கடிபட்டி கிராமத்தில் இறந்த அவரது தாயார் துக்க நிகழ்ச்சிக்காக சென்று விட்டார்.

இதேபோல் வேணு(60) (மெக்கானிக்) தனது மனைவி கோவிந்தம்மாள்(55) உடன் வீட்டை பூட்டி விட்டு சென்னையில் சகோதரர் ஹரிகிருஷ்ணன் மகள் திருமணத்திற்காக கடந்த வியாழக்கிழமை சென்னைக்கு சென்று விட்டார்.

இந்நிலையில் வெளியூர் சென்ற பெருமாளும், வேணுவும் இன்று காலை மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்த போது இருவரது வீடுகளின் பூட்டு உடைக்கப்பட்டு, பெருமாள் வீட்டில் பீரோவில் வைத்திருந்த 7 பவுன் செயின், தலா 1 பவுன் கொண்ட 2 மோதிரங்கள், ரூ.90 ஆயிரம் ரொக்கம், பட்டு புடைவகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களும், வேணு வீட்டில் 5 ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் திருட்டு போனது தெரிய வந்தது.

தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் துப்பறியும் நாய் உதவியுடன், தடயங்களை சேகரித்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தற்போது திருட்டு சம்பவம் நிகழ்ந்த வேணு என்பவரது வீட்டில் கடந்த டிசம்பர் மாதம்தான் 5 பவுன் தங்க நகை 11 ஆயிரம் ரூபாய் திருடு போய் இன்னும் குற்றவாளிகள் கைது
செய்யப்படாத நிலையில் மீண்டும் வேணு வீடும் அதே பகுதியில் மற்றொரு வீட்டிலும் நடந்த திருட்டு சம்பவம் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் மத்தியில் சற்று அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!