Seminar on High Technologies in Onion Cultivation at Perambalur; Launched by the Collector!
பெரம்பலூர் ஸ்ரீ முத்துகிருஷ்ணா மக்கள் மன்றத்தில் தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறை சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சின்ன வெங்காயம் சாகுபடியில் உயர் தொழில்நுட்பம் மற்றும் மதிப்பு கூட்டுதல் கருத்தரங்கினை கலெக்டர் கற்பகம், எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலையில் தொடங்கி வைத்தார். பின்னர், அவர் பேசியதாவது:
பெரம்பலூர் மாவட்டம் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட மாவட்டம், குறிப்பாக சின்ன வெங்காயம், பருத்தி, மக்காச்சோளம், கரும்பு ஆகிய பயிர்கள் அதிகமாக விளையும் மாவட்டம். இதுபோன்ற கருத்தரங்குகளில் வழங்கப்படும் கருத்துக்களை, நவீன தொழில்நுட்பங்கள் சார்ந்த தகவல்களை பயன்படுத்தி விளை பொருட்களை உற்பத்தி செய்து பயன்பெற வேண்டும்.
மேலும் விவசாயிகளின் உணவுபொருட்களை அறுவடை செய்யும் 15 நாட்களுக்கு முன்னதாகவே பூச்சிக்கொல்லி தெளிப்பதை தவிர்த்து, பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் சந்தைப்படுத்துதல் வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து, விவசாயிகளுக்கு சின்ன வெங்காய சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்கள், அறுவடைக்கு பின் மேலாண்மை, பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாட்டு மேலாண்மை தொடர்பாக தொழில்நுட்ப உரைகளை திருச்சி மாவட்ட மகளிர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய தோட்டக்கலை விஞ்ஞானிகள் காணொளி மூலம் எடுத்துரைத்தனர். மேலும், சின்ன வெங்காயத்தில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. .
இக்கருத்தரங்கில் தோட்டக்கலைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்கள் தொடர்பான செயல் விளக்க கண்காட்சி அமைக்கப்பட்டது. கருத்தரங்கிற்கு வந்த அனைத்து விவசாயிகளும் இதனை கண்டுகளித்து பயனடைந்தனர்.
அதனைத்தொடர்ந்து 03 விவசாயிகளுக்கு தலா ரூ.85,000 மானியத்தில் உழவு இயந்திரத்தினையும், 1 விவசாயிக்கு ரூ.40,000 மானியத்தில் ரொட்டவேட்டர் இயந்திரத்தினையும் கலெக்டர் கற்பகம் எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலையில் வழங்கினார்.
இந்த கருத்தரங்கில் பெரம்பலூர் மாவட்ட அனைத்து வட்டாரங்களிலிருந்தும், 150 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில், மாவட்ட ஊராட்சி சேர்மன் குன்னம் சி.ராஜேந்திரன், நகராட்சி துணைத்தலைவர் ஹரிபாஸ்கர், வேளாண் துறை பணியாளர்கள், துறைசார்ந்த பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.