Silent tribute to the late former Chief Minister Jayalalithaa Almighty School Students in perambalur
பெரம்பலூரில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பள்ளிகளில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவு தமிழக மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. ஜெயலலிதா மறைவை ஓட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த டிசம்பர் 6ஆம் தேதி முதல் டிசம்பர் 8ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனையடுத்து, மூன்று நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பள்ளிகளில் இன்று அஞ்சலி செலுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது. அதன்படி பெரம்பலூர் அருகே உள்ள ஆல் மைட்டி பள்ளி மாணவ மாணவியர்கள் சார்பில் இன்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர் தூவி இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் நோட்டு புத்தகங்கள், பை, லேப்டாப், சைக்கிள் என இலவச பொருட்களில் அனைத்திலுமே ஜெயலலிதாவின் உருவப்படம் உள்ளது. ஜெயலலிதா, மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியதாக பலரும் புகழஞ்சலி செலுத்தினர்.
இதில் சேர்மன் ஏ.இராஜ்குமார், பள்ளி முதல்வர் சாரதா செந்தில்குமார், ஒருங்கிணைப்பாளர் ஹேமாமாலினி சந்திரோதயம் , ஆசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், வாகன ஓட்டுநர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மவுன அஞ்சலி செலுத்தினர்.
இதே போன்று, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு, மற்றும் தனியார் என நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் முதலமைச்சர் ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தினர்.